Friday, March 9, 2018

அத்தி

அத்தி

தாவர இயல் பெயர்: FICUS GLOMERATA , ROXB ; MORACEAE
இதன் மறு பெயர்கள்: அதவு, வெருகு, அசமருதம்
வளரும் இடங்கள்: இது எல்லா இடங்களிலும் காணப்படுவதில்லை மிக அரிதான மரம். எனினும் இது எந்த சூழ்நிலையிலும் வளரக் கூடியது தான். மண்ணில் சிறிது ஈரத் தன்மை இருந்தாலே போதும். அதிலும் குறிப்பாக தென்னிந்திய மண்ணிற்கு இந்தத் தாவரம் நன்றாக வளரும் இயல்பு உடையது.
பயன் தரும் பகுதிகள்: இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை என அனைத்துமே பயன் தரும் பகுதிகள் தான்.
பொதுவான தகவல்கள் : அத்தி (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது. நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும். அத்திப் பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். எனினும் அத்திப் பழத்தை சாப்பிடக் கூடாது என்றெல்லாம் இல்லை. பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது. திருவொற்றியூர், திருக்கானாட்டுமுள்ளூர் முதலிய திருக்கோயில்களில் இரண்டாவது தல மரமாக விளங்குவது அத்தியாகும்.
அத்தி மரத்தின் இலை, பால், பழம் என அனைத்துமே மருத்துவ குணம் மிக்கது. உலற வைத்துப் பொடித்த இலைகள் பித்தம் மற்றும் பித்தத்தால் வரும் நோய்களைக் குணமாக்க வல்லது. காயங்களில் வடியும் இரத்தப்போக்கை உடனே நிறுத்தும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற உபாதைகளுக்கு அத்தி இலைகள் சிறந்தது. இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்த நீரால் வாய் கொப்பளிக்க உடன் பலன் கிடைக்கும். மரப்பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும்.
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, கடும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப் போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
அத்திப்பழத்தை ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள். சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பொடியாக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
அத்திமரத்தின் விரிவான மருத்துவப் பயன்கள்:-
* தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
* மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
* நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
* போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.
* தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்திப் பட்டையை ஊற வைத்த நீரால் ஆறாத புண்ணைக் கழுவி வர, புண்கள் ஆறும்.
* அத்திப் பாலுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து நான்கு மணிக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் கொடுக்க சிறுநீரில் இரத்தம் போவது நிற்கும். இரத்த பேதி மாறும். வயிற்றுக் கோளாறுகள் கூட நீங்கும்.
* அத்தி விதைத்தூளில் நீர் கலந்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
* உலர் அத்திக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட நோயுற்ற கல்லீரல் சீரடையும்.
* அத்திப் பிஞ்சை சமைத்து உண்டால் இரத்த மூலம் மற்றும் வயிற்றுப் போக்கு தீரும்.
* அத்திப் பழம் அஜீரணத்தை குணப்படுத்தும்.
* அத்திக்காயை அரைத்து, அரிசி கழுவிய நீருடன் பருகச் செய்தால் வெறிநாய் நஞ்சு நீங்கும்.
* அத்தித் தளிர் விதையை உண்டு வந்தால் விந்து கட்டுப்படும். அத்துடன் உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தம் நீங்கும்.
* அத்திக்காயை சமைத்து சாப்பிட்டால் பிரமேகம், வாதநோய்கள், சூலை தீரும்.
* வெந்தயக் கீரையுடன் அத்திப் பழத்தை சேர்த்து நன்றாக அரைத்து கட்டிகள் மீது தடவி வந்தால் விரைவில் கட்டிகள் உடைந்துவிடும்.
* உடம்பில் வீக்கம், வாதவலி உள்ள இடத்தில் அத்திப்பாலை தடவி வர வீக்கம், மூட்டு வலி மாறும்.
* அத்திப் பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் இருதயம் பலம் பெறும்.
* அத்திக்காயை உண்ண உதட்டில் வெடிப்புகள் இருந்தால் தீரும்.
* அத்திப்பாலை மூட்டு வலிகளுக்கு பற்றிட வலி குறையும்.
பின்குறிப்பு : சிறுநீர் கல் உள்ளவர்கள் அத்திப் பழத்தை தவிர்க்கவும். எந்தவகையிலும் அத்தியை பயன்படுத்தக் கூடாது.

அதிமதுரம்

அதிமதுரம்

தாவர இயல் பெயர்: Glycyrrbiza glabra
இதன் மறு பெயர்கள்: அஷ்டி, குன்றிவேர், இரட்டிப்பு மதுரம், அதிங்கம்
வளரும் இடங்கள்: இமாலய பிரதேசங்களில் வளரும். அது தவிர பஞ்சாப், காஷ்மீர் ஆகிய இடங்களில் வளர்கிறது.
பயன் தரும் பகுதிகள்: வேர்
பொதுவான தகவல்கள் : அதிமதுரம் என்ற பெயரிலேயே அதன் தனித்துவம் விளங்குகிறது. அதி + மதுரம் = அதிமதுரம். மிகுந்த இனிப்புச் சுவை உடைய மூலிகை என்பது இதன் பொருள். அதிக நேரம் இனிப்பது என்பதும் கூட இதன் பொருளாகும். அதிமதுரத்தின் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra. இது Fabaceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகை.
சித்த மருத்துவத்தில் ‘அதிமதுரம்’ என்றும், வழக்கு மொழியில் ‘அதிங்கம்’, ‘அட்டி’, ‘மதூகம்’ என்றும் வழங்குவர். சமஸ்கிருதத்தில் ‘யுஷ்டிமது’, ‘அதிரஸா’, ‘மதுரஸா’ என்று குறிப்பிடுவர். உருது மொழியில் முலெத்தி என்று கூறுவர். அதிமதுரத்தின் வேர்களே நமக்குப் பெரிதும் பயன்படுகின்றன. வேர்கள் மிகுந்த இனிப்புச் சுவை கொண்டவை... குளிர்ச்சி தன்மை உடையவை. அதிமதுரத்தை உண்ட பிறகு, அது இனிப்பாகவே மாறும் (பிரியும்) இயல்புடையது. அதிமதுரம் இரண்டு வகைப் படும். சீமை அதிமதுரம்,நாட்டு அதிமதுரம்.
சீமை அதிமதுரம் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. இது வங்கதேசம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது.
நாட்டு அதிமதுரம் சிறியதாகவும், விரல் பருமனாகவும், ஒடித்தால் வெண்மையாகவும், சிறிது இனிப்பாகவும் வழவழப்பாகவும் இருக்கும். இதை ‘குன்றிமணி வேர்’ என்ற பெயரில் நாட்டுமருந்துக் கடைகளில் விற்கின்றனர்.
மொத்தத்தில் அதிமதுரம் (liquorice) ஒரு அற்புத மருத்துவ மூலிகை. இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம். கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர். காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். நரம்புத் தளர்ச்சியை போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படும்.
மருத்துவப் பயன்கள்:
* அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீரில் கலந்து குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.
* திராட்சை, அதிமதுரம் இவற்றின் கஷாயத்துடன் காய்ச்சிய பாலைப் பருகச் செய்தால், சிறுநீரத் தடையால் தோன்றிய வயிறு உப்புசம் நீங்கும்.
* அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில், ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலையில் அழுத்தித் தேய்த்து, சிறிது நேரங்கழித்துக் குளிக்க, தலைமுடியின் குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டுப் போல பிரகாசிக்கும்.
* கரு சுருங்கிய போதும், குழந்தை இளைத்த போதும், குமிழம் வேர், அதிமதுரம் சேர்த்துக் காய்ச்சிய பாலில் சர்க்கரை கலந்து பருகச் செய்யவும். அப்படி ஒரு மண்டலம் செய்தால் விரைவில் தீர்வு கிட்டும்.
* அதிமதுரம், சுக்கு இவற்றைக் கஷாயம் காய்ச்சிப் பருகச் செய்தால் அடிபடுதலால் உண்டாகும் இளைப்பு தீரும்.
* தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும் தன்மை கொண்டது இந்த அதிமதுரப் பொடி.
* அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.
* அதிமதுரம், மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது.
* அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலில் அரைத்து. துளி குங்குமப்பூ போட்டு கலந்து, இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வரவும். சில வாரங்களில் முடிகள் தோன்றும்.
* அதிமதுரச் சாறு அல்லது கஷாயம் மிதமான பேதி மருந்தாகவும், சிறு நீரகக் கோளாறுகளுக்கும், மார்பு மற்றும் வயிற்றுக்கு கோளாறுகளுக்கும் நல்ல மருந்தாகவும் இருக்கும்.
* அதிமதுரத்தை இஞ்சி மற்றும் பாலுடன் கலந்து சாப்பிட சோர்வு நீங்கும்.
* அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும்.
* அதிமதுரத்துடன் சமஅளவு, தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு, கால் டீஸ்பூன் தேனில் குழைத்து, சிறிது சிறிதாக சுவைத்து உண்ண, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.
* அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர, உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.
* அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 அல்லது 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களின் இயற்கை கோளாறுகள் நீங்கும்.
* அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும்.
* ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது இந்த அதிமதுரப் பொடி.
* இளமையில் போக சக்தியை இழந்து விட்ட வாலிபர்களுக்கு அதிமதுரம் ஒரு புத்துயிர் அளிக்கும் அரு மருந்தாக பழங்காலத்தில் இருந்தே பயன்பட்டு வருகிறது.
* அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க, இருமல் தணியும். அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு, 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.
* அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.
* அதிமதுரத்து பொடியுடன் சிற்றாமணக்கு நெய் தடவி, குன்றி இலையை ஒட்டவைக்க பிடிப்பும், சுளுக்கும் குணமாகும்.
* தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.
* கண்கள் ஒளிபெற அதிமதுரத்தை முலைப்பால் விட்டு அரைத்து கண்ணில் விட வேண்டும்.
* போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள், ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தை, பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும்.
* சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு அதிமதுரம், கடுக்காய், மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து இளவறுப்பாய் வறுத்து சூரணம் செய்து தேனில் சாப்பிட குணமாகும்.
* சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள் உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
* வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* சூட்டினால் உண்டாகும் இருமல், மஞ்சள் காமாலை, உடல் உஷ்ணம் போன்றவை தனிய அதிமதுரப்பொடி உதவும்.
* அதிமதுரத்துடன் தேன் கலந்து சாப்பிட சர்க்கரை வியாதி குணமாகும்.

வேம்பு

வேம்பு

தாவர இயல் பெயர்: Azadirachta indica
இதன் மறு பெயர்கள்: வேப்பமரம், அரிட்டம், துத்தை, நிம்பம், வாதாரி, பாரிபத்திரம், பசுமந்தம்
வளரும் இடங்கள்: இந்தியா, ஈரான், பாகிஸ்தான், இலங்கை , மியான்மர், இது தவிர தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவை சேர்ந்த இதர நாடுகள், ஆப்ரிக்கா, அமெரிக்க கண்டங்கள், ஒரு சில அரபு நாடுகள்
பயன் தரும் பகுதிகள்: இலைகள், கொட்டைகள், பட்டை, மலர், பழம் மற்றும் குச்சி ஆகிய இவை அனைத்துமே பயன் தரும் பகுதிகள் தான் பொதுவான தகவல்கள் : "வேம்பு" என்று அழைக்கப்படும் வேப்ப மரத்தை அறியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. இதனை சக்தியின் அம்சமாகவும் கருதி தலை முறை, தலை முறையாக மக்கள் பாதுகாத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதன் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது தான். மனிதர்களுக்கு ஊரு விளைவிக்கும் நுண்ணிய கிருமிகளை அழிக்க வல்லது. இதில் இருந்து தற்காலங்களில் சோப்புகள் கூட தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் முக்கிய மூலிகைகளில் முதன்மையானது இந்த வேம்பு என்று சொன்னால் அது மிகை ஆகாது. இது மருத்துவ உலகில் மார்க்கோசா மற்றும் நீம் என்று அழைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் கூட வேப்பங்குச்சியில் பற்களை சுத்தம் செய்யும் வழக்கம் வெகுவாகப் பரவி வருகிறது.
வேப்ப மரம் நமக்கு நிழலை மட்டும் அல்ல பாதுகாப்பையும் அளிக்கிறது. வேப்ப மரத்து இலைகளில் பட்டு வெளிவரும் காற்றும் கூட ஊரு விளைவிக்கும் கிருமிகளை அழிக்க வல்லது. வேப்ப மரத்தின் பழ விதைகளில் (வேப்பங்கொட்டை) இருந்து வேப்ப எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது கொசுக்களை விரட்ட வல்லது. வேப்ப எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் வீட்டிற்கு கொசு, ஈ என எதுவுமே வராது. வேப்பெண்ணெய் பொதுவாக சமையலில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இதிலுள்ள மருத்துவக் குணங்களின் காரணமாக, மருந்தாகவும், ஒப்பனைப் பொருட்களாகவும், சோப் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் பீடைகொல்லிகள், பூச்சிகொல்லிகளாகப் பயன்படுத்தப்படுவதுடன், சேமிக்கப்பட்ட விதைகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது.
மொத்தத்தில் வேப்ப மரத்தை முழுமையாக உபயோகிக்கும் பட்சத்தில் பல வித வியாதிகளில் இருந்து நாம் விடுபடலாம். இது மருத்துவ உலகத்தில் சர்வ, சரும ரோக நிவாரணியாகக் கருதப்படுகிறது.
புராணங்களில் வேப்ப மரம் : தேவர்களின் தலைவனான இந்திரன் தனது வெள்ளை யானையில் அமிர்த கலசத்தினை கொண்டு செல்கையில், அதிலிருந்து தளும்பிய அமிர்தம் வேப்ப மரத்தில் விழுந்ததாகவும், அதனால் தான் அது எல்லா விதமான நோய்களையும் தீர்க்கும் படியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல இந்த மரம் சூரியனின் அருள் பெற்ற மரம் என்றும். இதன் நிழலில் சூரிய தேவனே தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவப் பயன்கள்:
*மாதம் ஒரு முறை வேப்பம்பூ ரசம், துவையல் ஆகியவற்றை சமைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக சித்திரை மாதம் துவங்கும் சமயம் அதிகளவில் வேப்பம் பூக்களை மரத்தில் காணலாம்.
* வயிற்றில் பூச்சி இருந்தால் தினமும் வேப்பம் பழத்தை சாப்பிடுங்கள். பூச்சிகள் வெளியேறிவிடும்.
* வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்தத்தால் வரும் மயக்கம் குணமாகிவிடும்.
* வேப்பம் பூவை உண்டு வந்தால் வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கும்.
* வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.
* சர்க்கரைவியாதியை கட்டுக்குள் கொண்டுவர தினமும் வேப்பங்க்காயை சாப்பிட்டு வாருங்கள். மாத்திரையின்றி கட்டுக்குள் கொண்டு வரலாம்.
* வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரையை சேர்த்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் தீராத தொழுநோய் முதலான அனைத்து சரும வியாதிகளும் குணம்டையும்.
* 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும்.
* வேப்பங்குச்சியை பயன்படுத்தி பல் விலக்க. பல் சம்மந்தமான அனைத்துப் பிரச்சனைகளும் தீரும்.
* வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும்.
* வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து நகச்சுத்திக்கு பற்று போட்டால் சீக்கிரத்தில் குணமாகும்.
* வீட்டில் சாம்பிராணியுடன் வேப்பம் பூவையும் கலந்து தூபம் போட்டால் காற்றில் இருக்கும் விஷ ஜந்துக்கள் மடியும்.
* வேப்பம் இலையை தண்ணீரில் போட்டு அதனை நன்கு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் பரு, கரும் புள்ளிகள் ஆகிய அனைத்தும் நீங்கும். வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.
* அம்மை நோய் வந்தவர்கள் வேப்பிலையை கீழே போட்டு அதன் மேல் படுத்துக்கொள்வது நல்லது. மேலும் வேப்பிலை அல்லது இளந்தளிருடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அம்மை கொப்புளங்களின் மீது தடவி வந்தால், நோய் விரைவில் குணமாகும்.
* காய்ந்த வேப்பம்பூ தூளை 4 சிட்டிகை எடுத்து இஞ்சிச் சாறில் கலந்து சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய ஏப்பம் குணமாகும்.
* வேப்பம்பூ தூள் 4 சிட்டிகை அளவு எடுத்து, 2 சிட்டிகை பெருங்காயத்தூளுடன் சேர்த்து வெந்நீரில் கரைத்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை விலகும்.
* வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தாவரங்களை அழிக்கும் பூச்சிகளை அவை கூட்டு புழு பருவத்தில் இருக்கும் போதே அழித்து விடுகிறது. வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்தால் அம்மருந்தின் வாசனை இருக்கும் வரை பூச்சிகள் எந்த செடியினையும் அழிக்காமல் உள்ளது.
* வேப்பமரம் சுற்றுப்புறச் சூழ்நிலையை பாதுகாக்கிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. அதிகமான வேப்ப மரங்கள் நடுவதால் பூமி குளிர்ச்சி அடைகிறது. எந்த சூழ்நிலை யிலும் வேப்பமர வளர்ச்சி பாதிப்பு அடைவது இல்லை. வேப்பமரம் மிக வேகமாக வளரும் மரமாகும். தொண்ணூறு அடி உயரம் வரை வளரும். பூமியின் பசுமையை காப்பாற்றும் மரம் வேப்ப மரமாகும்.
* வேப்ப மரப்பட்டையின் சாறு மாத்திரை களாக தயாரிக்கப்பட்டு ஆண்கள் உட்கொண் டால் ஆண்களுக்கு அது இயற்கையிலேயே ஒரு குடும்ப கட்டுப்பாட்டு சாதனமாக அமைகிறது. வேப்ப மரப்பட்டைகள் மற்றும் வேப்ப இலைகள் இயல்பாகவே ஒரு பூச்சி கொல்லி மருந்தாக வேலை செய்கிறது.
* வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.
* வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.
* 100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.
* லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.
* வேப்பமரத்தின் இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.
* விஷம் உட்கொண்டவர்களுக்கு வேப்பங் கொட்டையை மையாக அரைத்து நீரில் கலக்கிக் கொடுக்க வாந்தி ஏற்பட்டு விஷம் வெளியே வந்து விடும்.
* 5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.
* வேப்பம் பழத்துக்கு நீண்ட ஆயுளைத் தரும் ஆற்றல் உண்டு. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
* வேப்பம் பிண்ணாக்கு ஒத்தடம் உடல் வலியை உடனே நீக்கும்.
* வேப்பங்கொட்டையின் பருப்புக்களை அரைத்துப் பூசினால் புழுப்பட்ட புண்களும் குணமாகும்.
சித்த மருத்துவப் பாடல்களில் வேப்ப மரம் :-
காய சித்தியாகும் கடி யசிலேஷ்ம்மாறும்
தூயவிந்து நாதமிவை சுத்தியுமாம் – தூயவருக்கு
எத்திக்கும் கிட்டும் இலையருந்தில் வாயெல்லாம்
தித்தக்கும் வேம்பதற்கு தேர்.
————————————————————– அகத்தியர்.
குட்டநோய் பதினெட்டும் தீர்வதற்கு………
தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக் கிள்ளி
இன்பமுடன் தின்று வாயிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்பங்கள் தீண்டினாலும்
அதுபட்டுப் போகும்ப்பா அறிந்து கொள்ளே
கொள்ளப்பா மாதமொன்று கொண்டாயாகில்
குட்டமென்ற பதினெட்டு வகையுந் தீரும்.
பொருள்: கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விடம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சையம் குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும்.

வெந்தயம்

வெந்தயம்

தாவர இயல் பெயர்: Trigonella foenum-graecum [ Family: Fabaceae (Pea family)]
இதன் மறு பெயர்கள்: மேத்தி, மேத்திகா
வளரும் இடங்கள்: இந்தியா உட்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் விளையும்
பயன் தரும் பகுதிகள்: இந்தியாவின் பல பகுதிகளில் வளர்க்கப்படும் வெந்தயத்தின் விதைகள் மற்றும் இலைகள்.
பொதுவான தகவல்கள் : வெந்தயம் (ஆங்கிலம்: Fenugreek; இந்தி: மேதி) (தாவர இயல்:Trigonella foenum-graecum) என்பது Fabaceae குடும்ப மூலிகை. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.
வெந்தயத்தில் புரதம், கொழுப்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, சோடியம், உயிர் சத்துக்கள், நிக்கோடினிக் அமிலம், கயோலின் உட்பட இன்னும் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது.
மேற்கண்ட சத்துக்கள் இருப்பதால் கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம் உதவி செய்கிறது. முக்கியமாக கொழுப்புப்புரதத்தை குறைக்க உதவுகிறது. இதய நோய்க்கு வெந்தயம் ஒரு சிறந்த மருந்து. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும். இதில் பொட்டாசியம் உள்ளதால், இதயத் துடிப்பு மற்றும் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரையை ரத்தம் உட்கொள்ளும் வீதம் குறையும். வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால், இன்சுலின் உற்பத்தியை அது தூண்டிவிடும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கண்டிப்பாக வெந்தயம் தேவை. அதிலுள்ள டையோஸ்ஜெனின் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.
இதுதவிர வெந்தயம் சீதக் கழிச்சல், உடல் எரிச்சல், தாகம், இளைப்பு நோய் போன்ற இவை அனைத்தையும் நீங்கும். அது மட்டும் அல்ல, வெந்தயம் கல்லீரல் நோய்களை நீக்கும்.
வெந்தயக் கீரை: சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரிடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரே வெந்தயச் செடியைப் பிடுங்கி விட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது.
சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம்.
வெந்தயக் கீரை ஜீரண சக்தியை செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். இதனால் உடல் சுத்தமாகும். அத்துடன் வெந்தயக் கீரையை உண்டால் குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும் போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.
நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும்.
அத்துடன் இடுப்பு வலியும் நீங்கும். வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும். வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது.
சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.
வெந்தயத்தின் இதர மருத்துவப் பயன்கள்:
* வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சொறி, சிரங்கு வராமல் தடுக்கிறது.
* வெந்தயக் கீரையை தேனுடன் உண்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.
* வெந்தயக் கீரையை அரைத்து நெய்யுடன் சேர்த்து உண்டு வந்தால் தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.
* மூலை நோய், குடல் புண் போன்ற நோய்களுக்கு இந்தக் கீரை சிறந்த மருந்து. அத்துடன் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
* வெந்தயக் கீரையை உண்டு வந்தால் சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள் தீரும். நரம்புகளை பலப்படுத்தும். வயிற்றுக்கு கட்டி, உடல் வீக்கம், சீத பேதி, குத்திருமல், வயிற்று வலி போன்ற அனைத்தும் குணமாகும்.
* வெந்தயத்தை ஊற வைத்து அது முளை கட்டவும், அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீட்ரூட் துருவல், தக்காளிப் பழத்துண்டுகள், உப்பு, மிளகுப்பொடி, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவும். சுவையான சத்துள்ள குளிர்ச்சியான சாலட்டும் கூட.
* வெந்தயம், ஓரிதழ் தாமரை, விடத்தலை வேர், சுக்கு, வால் மிளகு வகைக்கு 20 கிராம் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர உடல் அரிப்பு நீங்கும்.
* முகம் பளபளப்பாக இருக்க வெந்தயத்தை அரைத்து முகத்தில் பேஸ்பேக் போடலாம். பிறகு 10 நிமிடம் கழித்து கழுவவும். இப்படி சில நாட்கள் செய்து வர முகம் பளிச்சிடும்.
* தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்து வாருங்கள். வாய்க்கு கசப்பாக இருப்பதெல்லாம் உடலுக்கு நன்மையைத் தான் செய்யும். அந்த வகையில் இந்த வெந்தயம் கசக்கத் தான் செய்யும். எனினும், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மட்டுமின்றி கொழுப்புச் சத்தையும் கட்டுப்படுத்தும். இது தவிர வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
* ஒரு துண்டு இஞ்சியுடன் சிறிது வெந்தயம் வைத்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.
* வெந்தயத்தில் விட்டமின் ஏ இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்த உதவும்.
* வெந்தயத்தை சிறிது வறுத்து சுக்குடன் வைத்துப் பொடியாக்கி, கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
* தண்ணீரில் நான்கு மணிநேரம் ஊற வைத்து எடுத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர குடல் சம்மந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.
* ஊற வைத்த வெந்தயத்தை குழந்தையை பெற்ற தாய்மார்கள் உண்டு வர. பால் நன்றாக சுரக்கும். குழந்தைக்கும் நல்லது. தாய்க்கும் உடல் சத்தை அதிகரிக்கும்.
* வெந்தயத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் முடி கொட்டாது, சீக்கிரத்தில் நரை வராது. அத்துடன் முடியும் நன்றாக வளரும்.
* முளைக் கட்டிய வெந்தயத்தை தயிரில் கலந்து அருமையான ஆரோக்கியமான தயிர் பச்சடி செய்யலாம். இதனால் உடலை வெப்பம் தாக்காது. வெயில் காலத்தில் வேர்குறு வராது. (வெந்தயத்தை முளை கட்டி ஓரிரு முறை களைந்தால் அதன் கசப்பு கணிசமாகக் குறைந்து விடும்)
* தீக்காயத்திற்கு வெந்தயத்தை ஊறவைத்து விழுதாக அரைத்து பற்றுப் போட்டால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.
* அவுரி இலையுடன் சிறிது வெந்தயம் மிளகு சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் பூரான் கடி விஷம் முறியும்.
* தினசரி 15 கிராம் வெந்தயத்தை தவறாமல் உண்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராகும், ரத்தம் சுத்தமாகும்,ரத்தத்தில் உள்ள கொழுப்பும் குறையும். ஜீரண சக்தி அதிகரித்து உடல் எடையும் குறையும். வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து சீயக்காய் போல தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
* வாயுத் தொல்லை உள்ளவர்கள் தினமும் காலையில் பல் விளக்கியதும் ஒரு தேக்கரண்டி வறுத்துப் பொடித்த வெந்தயப் பொடியைச் சாப்பிட்டால் வாயு வெளியேறிவிடும்.
* வெந்தயத்தையும், நெல்லி இலையையும் சேர்த்து எட்டு மணி நேரம் ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் சீதபேதி நிவர்த்தியாகும்.
* பச்சை வெங்காயத்துடன், ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து சாப்பிட்டு வர விந்து உற்பத்தி அதிகரிக்கும். ஆண்,பெண் இருபாலருக்கும் காம இச்சையை ஏற்படுத்தும். தாம்பத்தியத்திற்கு மிக நல்லது.

வில்வம்

வில்வம்

தாவர இயல் பெயர்: Bael, Aegle marmelos
இதன் மறு பெயர்கள்: கூவிளம், சரபீதலம், அலுவீகம், அல்லூரம், ஆலூகம், சட்டாம், சிறிய பலகியம், திரிபத்ர, பில்வம், பூவிதாத, சலய, மாங்கல்ய, சாண்டல்லியம், கற்கடக நிலை மல்லிகம், குசாபி, வில்வை
வளரும் இடங்கள்: இலங்கை, இந்தியா மற்றும் அயனமண்டலத்தை சேர்ந்த ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும்.
பயன் தரும் பகுதிகள்: இலைகள், கொட்டைகள், பட்டை, மலர், பழம் மற்றும் குச்சி ஆகிய இவை அனைத்துமே பயன் தரும் பகுதிகள் தான்.
பொதுவான தகவல்கள் : வில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா மற்றும் அயனமண்டலத்தை சேர்ந்த ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
கூவிளம் என்னும் சொல் வில்வ மரத்தைக் குறிக்கும். சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் கூவிளம் என்பதும் காட்டப்பட்டுள்ளது.
கடையெழு வள்ளல்களில் ஒருவனான எழினியின் குடிப்பூ கூவிளம். தமிழில் 'கூவிளம்' , 'இளகம்' எனப்பல பெயர்களில் வழங்கப்படும் இது தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது. மூக்கடைப்பு, செரியாமை, காசம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் என்பன மருந்தாகப் பயன்படுகிறது. வில்வ வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்றாகும்.
ஆன்மீகத்தில் வில்வ மரம் :-
இந்து மதத்தில் வில்வ மரம் மிகப் புனிதமானது.சிவ வழிபாட்டில் வில்வ பத்திர பூசை முக்கியமானது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. இது இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்பதைக் குறிக்கின்றது. நேபாளத்தில் கன்னிப் பெண்களின் கருவளத்தைக் காக்கவேண்டி வில்வம் பழத்திற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு பிரபலமானது.
சிவபெருமானுக்கு வில்வம் ஒன்று சாத்தினால் சிவலோக பதவியும், இரண்டு சாத்தினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும். மூன்று சாத்தினால் அவனின் அருள் பெறலாம், நான்கு வில்வ இதழ்கள் சாத்தினால் அவனுடன் ஐக்கியமாகலாம் என்பது ஐதீகம்.
வில்வம், கிளுவை, விளா, வெண்ணொச்சி, மாவிலங்கை. இவைகளை ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் பெளர்ணமியில் சிவனுக்குச் சாத்தினால் மெய்ஞ்ஞானம் ஏற்படும். வில்வம் பக்தியையும், முக்தியையும் அளிக்கக்கூடியதாகும்.
வில்வமரத்தை வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.
கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.
108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் எமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.
சிவனிற்கு பிரியமான வில்வர்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாச்சத்தைப் பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை.
ஒரு வில்வதளம் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ண புஷ்பங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமன். வில்வப் பழத்தின் மகத்துவம்:-
வில்வப்பழம் இருதயத்துக்கு வலுவூட்டுகிறது. சுவாசத்தில் நல்ல வாசனையை உருவாக்குகிறது. நெஞ்சில் பாரத்தைக் குறைக்கிறது. வில்வப் பழத்தை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். வில்வப்பழம் மாரடைப்பு நோயைத் தடுக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் வில்வப்பழத்தைச் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும்.
வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் சிறந்த மருத்தாகும். இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். சிறுநீர் கோளாறுகளை நீக்கும். தாய்ப்பாலை பெருக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைக் குணமாக்கும். சிறுநீரகத்தில் உண்டாகும் கற்களைக் கூடக் கரைக்கும். இதை ஊறுகாய் போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
15 அடி முதல் 25 அடி வரை உயரமுள்ள இம்மரத்தின் இலைகளில் முள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 3 இலைகள் இருக்கும். வில்வப் பழம் பார்ப்பதற்கு ஆப்பிள் வடிவில் இருக்கும். அரபு மொழியில் பிஹி, சபர்ஜல் என்று அழைப்பார்கள். யுனானி மருத்துவர்கள் இதை பேல்கிரி என்றும், நாட்டு மருத்துவர்கள் வில்வப் பழம் என்றும் அழைப்பார்கள். கோடைக்காலத்தில் பழுக்கும் வில்வப்பழங்களின் தோல் வழவழப் பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும். பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பாகவும் மாறிவிடும். கோடைக்காலம் ஆரம்பம் ஆகும் முன்பே மரத்தின் அனைத்து இலைகளும் உதிர்ந்து விடும். மீண்டும் தோன்றும் புதிய இலைகள் சிவப்பாக இருக்கும். நாளடைவில் பச்சை நிறத்தில் மாறிவிடும். நம் நாட்டில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் காகித வில்வம் என்ற பெயரில் கிடைக்கின்ற வில்வப் பழம் தான் மிகவும் உயர்ரக பழமாகக் கருதப்படுகிறது. இப்பழத்திற்குள் விதைகள் குறைவாக இருக்கும். இதன் பூக்களில் தேனைப்போன்ற வாசனை இருக்கும்.
மருத்துவ விஞ்ஞானிகள் வில்வப்பழத்தை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் டேனிக் ஆசிட், பேக்டீன் மற்றும் வழவழப்பான சத்துக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இப்பழத்தில் மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதைத் தெரிவித்துள்ளனர். வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின், பூமாரின் பிஸ்கிமானின் சத்துக்களும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன. விதைகள், இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்தும் ஒருவிதமான எண்ணெய்ப் பசையைப் பிரித்தெடுத்திருக்கின்றார்கள். இதைப் பூச்சிகள், ஈக்கள், எறும்புகள் மற்றும் விஷ ஜந்துக் களைச் சாகடிப்பதற்குப் பயன் படுத்துவார்கள். கிராமங்களில் இம்மரத்தின் இலைகள் மற்றும் தண்டுகளை எரித்துக் கொசுக்கள், எறும்புகள், தேனிக்கள் மற்றும் விஷப்பூச்சிகளை விரட்டுவார்கள்.
அடிக்கடி பேதியும், சீதபேதியும் ஆகுதல், இறைச்சி, மீன், முட்டை,பிரியாணி, வடை, எண்ணெய்ப் பலகாரங்கள், ரொட்டி போன்ற தாமதமாக ஜீரணமாகும் உணவுப் பொருட்களால் ஏற்படும் வயிற்றுவலி-பேதி, கல்லீரல், மண்ணீரல், இரைப்பை மற்றும் குடல் பலவீனத்தால் ஏற்படும் வியாதிகளைக் குணமாக்க வில்வப்பழம் மிகவும் பயன்படுகிறது. நாட்டு மருந்துக் கடைகளில் உலரவைத்து விற்கப்படும் வில்வப்பழத்தை வாங்கி 5 கிராம் அளவில் ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் அடிக்கடி ஏற்படும் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளுக்கும் சக்தி தரும்.
வில்வப் பழம் மன இறுக்கத்தையும் போக்க வல்லது. இன்னும் சொல்லப் போனால் கடந்த கால சம்பவங்களையே நினைத்து நினைத்து வேதனையில் மூழ்கியிருப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் ஓர் அமுதம் என்றே வில்வப் பழத்தைச் சொல்லலாம். அவர்கள் இரண்டு கிராம் அளவில் கஷாயம் தயாரித்து தினசரி ஒருவேளை குடிக்கலாம். இதனால் மனம் நிம்மதி அடையும். மனம் ஒரு ஆலயமாக மாறும். இதனை இன்னொரு சிவ மூலிகை என்று சொன்னாலும் அது மிகையாகாது.
வில்வ மரத்தைப் பற்றிய மேலும் சில பொதுவான தகவல்கள்:-
மணமுடைய இலைகளைப் பெற்ற முட்களுள்ள பெரிய மரம் வில்வம். மாற்றடுக்கில் மூன்று கூட்டிலைகளைக் கொண்டது. ஐந்து கூட்டிலைகளைக் கொண்ட மரத்தை மகாவில்வம் என்பர். ஆனால், மகா வில்வம் மிகவும் அரிதாகக் காணக் கிடைக்கிறது.
பொதுவாக வில்வ இலை மலத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்று வலியைப் போக்கும். கபவாதங்களைத் தணிக்கும். காமத்தை விருத்தி செய்யும். எல்லாவிதமான மேக நோய்க்கும் வில்வம் அரும் மருந்தாக உள்ளது. இது அனைத்து வகையான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. வில்வப் பழம் பித்த சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.
வில்வத்தின் மேலும் பல மருத்துவப் பயன்கள்:
* வில்வத்தின் தளிர் இலைகளை வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுக்கக் கண்வலி, கண் சிவப்பு, அரிப்பு என அனைத்தும் நீங்கும்.
* வில்வ இலைகளை சுத்தம் செய்து தினமும் மென்று தின்று வந்தால் நல்ல செரிமானம் ஏற்படும். உண்ட உணவில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் கலந்து உடல் வலுப்பெற உதவும்.
* வில்வ இலைச் சூரணம் ஒரு தேக்கரண்டியும், கரிசலாங்கண்ணி இலைச்சாறு ஒரு தேக்கரண்டியும் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும்.
* வில்வ இலையை தினம் 5 முதல் 10 வரையில் தின்று வந்தால் ஆஸ்த்மா நோயின் கடுமை குறையும்.
* வில்வத்தின் பழச்சதையை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து மூன்று வேளை சாப்பிட பேதி, சீதபேதி, பசியின்மை குணமாகும்.
* வில்வப்பிஞ்சை அரைத்துத் தயிரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, புண் போன்றவை விரைவில் குணமாகும்.
* வில்வப்பூவையும், துளசி இலையையும் சமமாகத் தேவைக்கு ஏற்ப எடுத்து சிதைத்துச் சாறு எடுத்துக் கொண்டு, சிறிது தேன் கலந்து காலை, மாலையாக வேலைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் மிகக் கடுமையான அனைத்து வகைக் காய்ச்சலும் தணிந்து நோய் நீங்கும். அத்துடன் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது.
* வில்வ இலையைக் கைப்பிடி அளவு எடுத்து இரவு தண்ணீரில் குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து, தினசரி காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லியளவு இந்த ஊற வைத்த நீரை குடித்து வந்தால் - உடம்பில் ஏற்படும் கை, கால் வலிகள் கட்டுப்படும். அத்துடன் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் இந்த நீரை குடித்து வர காலப்போக்கில் புத்தி தெளியும்.
* வில்வப் பழச் சதையை, காய்ச்சிய பாலில் கசக்கி விட்டு, திப்பி நீக்கி சாப்பிட்டால் கணைச் சூடு குறையும்.
* வில்வப் பழத்தைச் சேகரித்து அதிமதுரத் தூள், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்த அதிகரிப்பால் ஏற்படும் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
* வில்வக் காயுடன், வெள்ளைப் பூண்டு வைத்து அரைத்து, தேமல் மீது தடவி வர, தேமல் மறைந்து சருமம் இயல்பு நிலையைப் பெறும்.
* வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
* வில்வப் பழ ஓட்டை எடுத்துக் கடைந்து கஷாயம் வைத்து, தேன் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
* வில்வப் பூக்களை புளி சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.
* வில்வாதி குளிகை - நஞ்சு, காலரா, அஜீரணம், இடுவிஷம், காய்ச்சல், கை கால் வலி ஆகிய அனைத்தையும் நீக்கும்.
* வில்வாதி லேகியம் - வாந்தி, இருதய நோய், காமாலை, குன்மம், கிரஹனி, சுவையின்மை, பீனிசம், இருமல், இழுப்பு, மண்ணீரல் வீக்கம், இது விஷம், மூல நோய், பாண்டு ஆகிய அனைத்தையும் தணிக்க வல்லது.
* வில்வாதி தைலம் இருதய நோயைத் தணிக்கும்.
* வில்வ இலையை வதக்கி அதை போட்டு குடிநீர் செய்து 21 நாட்கள் தொடர்ந்து காலையும் மாலையும் அருந்தி வர எல்லா விதமான பித்த ரோகங்களும் குணமாகும்.
* வில்வ இலைப் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வர குடல் புண், வாந்தி, மயக்கம் போன்ற அனைத்தும் தீரும்.
* வில்வ இலைச் சூரணம் காச நோய், வாய்ப்புண், குடற்புண் ஆகிய அனைத்தையும் நீக்கும் தன்மை கொண்டது.

வல்லாரை

வல்லாரை

தாவர இயல் பெயர்: Centella asiatica
இதன் மறு பெயர்கள்: பிராம்மி, சரஸ்வதி கீரை, சண்டகி, பிண்டீரி, யோசனை வல்லி, சரஸ்வதி மூலிகை
வளரும் இடங்கள்: குறிப்பாக இந்தியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, மற்றும் இதர வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் வளருகிறது. பயன் தரும் பகுதிகள்: குறிப்பாக இலைகள் உட்பட முழுத் தாவரமும் பயன்படுத்த வல்லது.
பொதுவான தகவல்கள் : வல்லாரை (Centella asiatica) அல்லது சரஸ்வதி கீரை என்பது ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய கீரை வகைத் தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப் பகுதிகள் உணவாகப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும்.
பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் புறப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும், பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன. இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பில் உள்ள கீரை வகையைச் சேர்ந்தது.
இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது. மலேசியர்களும், சீனர்களும் வல்லாரையை விரும்பி உணவுடன் உட்கொள்கிறார்கள். இதிலுள்ள ஆவியாகும் எண்ணெய் தோல் பகுதியில் செயல்பட்டு நன்கு வேலை செய்கிறது. உடலைத் தேற்றும் பலம் தரும். தோல் வியாதியிலும் பயன் தரும். வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரம் இருமுறை பயமின்றி உபயோகிக்கலாம்.
வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை எனப்பெயர் பெற்றது. ஞாபக சக்தியை அதீதமாக மேம்படுத்துவதால் இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.
மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக்கின்றனர்.
இக்கீரையை உண்ணும் முறை:-
1. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.
2. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
3. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.
4. இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது.
(i) இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.
(ii) புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.
5. சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
6. இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.
வல்லாரையின் விவரமான மருத்துவப் பயன்கள்:
* அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயிலிட்டு மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்தவும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும்.
* வல்லாரை இலையை பச்சையாக பயன்படுத்தக் கூடாது. இலைகளை ஆய்ந்து பிட்டுபோல அவித்த பின்னரே பயன்படுத்த வேண்டும். வல்லாரை இலையுடன் அரிசித் திப்பிலி சேர்த்து ஊறவைத்த மைபோல அரைத்து, காலை, மாலை சுண்டைக் காயளவு சாப்பிட்டு வர நல்ல ஞாபசக்தி உண்டாகும்.
* வல்லாரை இலைகள் மூன்று, அக்ரோட் பருப்பு ஒன்று, பாதாம் பருப்பு ஒன்று, ஏலக்காய் ஒன்று, மிளகு மூன்று, கற்கண்டு பத்து கிராம் – ஆகியவற்றை அம்மியில் விழுதாய் அரைத்து, அதைப் பாலில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர, அன்னையின் அருளால் இதயநோய்கள் மாயமாய் மறையும்.
* குழந்தைகட்கு காணும் சீதபேதிக்கு 1-2 இலையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சர்க்கரைக் கூட்டிக் கொடுக்கக் குணமாகும்.
* கால் கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து வடித்து, அத்துடன் ஒரு கைப்பிடி அளவு வல்லாரை இலைகளையும், ஐந்து மிளகையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தேவையான அளவில் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து, அந்த மாவில் ரொட்டி போல் சுட்டு சாப்பிட்டு வர, படை, நமைச்சல், தோல் நோய்கள், குஷ்டம் போன்றவை விலகும்.
* வல்லாரைத் துவையல் உண்ண முகப்பரு குணமாகும்.
* வல்லாரை இலையைக் காயவைத்து அரை கிலோ அளவில் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் 50 கிராம் சீரகம், ஐந்து கிராம் மஞ்சள் சேர்த்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும். இதில் காலை, மாலை உணவுக்கு முன்பாக இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தி வர, அறிவு மேம்படும். நினைவாற்றல் பெருகும். அன்னை அருளால் அற்புதமான மூளை பலம் உண்டாகும்.
* அரை லிட்டர் வல்லாரை இலைச்சாற்றில் கால் கிலோ வாய்விளங்கத்தை ஊறவைத்து, அதை வெயிலில் உலர்த்தவும். இதனைத் தூள் செய்து வைத்துக்கொண்டு, காலையும் மாலையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வர, வலிப்பு குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள், கிருமிக் கோளாறுகள் மறையும்.
* 10 கிராம் வல்லாரைப் பொடியுடன், 5 கிராம் அதிமதுரத் தூள் கலந்து இரவில் தூங்கப் போகும் முன் தின்று வெந்நீர் குடிக்க மலச்சிக்கல் தீரும்.
* வல்லாரைக் கீரையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போன்றவை குணமாகும்.
* அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, காமாலை குணமாகும்.
* வல்லாரை இலைச்சாற்றில் அரிசித் திப்பிலியை ஊறவைத்து உலர்த்தித் தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் நான்கு சிட்டிகை அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, நாள்பட்ட கபநோய்கள், இரைப்பு, இருமல் ஆகியவை குணமாகும்.
* வல்லாரை இலைத் தூளுடன் சோம்புத் தூள் (சிட்டிகை அளவு) எடுத்து கலந்து தின்று வெந்நீர் குடித்து வர உஷ்ண வயிற்று வலி தீரும்.
* நரம்புத் தளர்ச்சி, தாது விருத்திப் பிரச்சனை, காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளித் தொல்லை, சிறு நீர்க் கோளாறு போன்றவற்றை குணப்படுத்துவதிலும் வல்லாரை சிறந்த மூலிகையாக உள்ளது.
* நிழலில் உலர்த்தித் தூள் செய்த வல்லாரைத் தூள் 100 கிராம், அமுக்கரா கிழங்குத்தூள் 100 கிராம் – இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். இதனை இரண்டு கிராம் அளவில் காலை – மாலை தேனுடன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, உடல் வலிமை, ஆரோக்கியம் உண்டாகும். இளைத்த உடல் பருக்கும். வல்லாரை இலைகளை அரைத்து தினசரி காலை நெல்லிக்காய் அளவு வீதம், 21 நாட்கள் சாப்பிட வாய்வு, விரை வீக்கம் தீரும்.
* கைப்பிடி அளவு வல்லாரை இலை இதே அளவு மணத்தக்காளி கீரை எடுத்து அரைத்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வர இரண்டு வாரத்தில் ரத்த சோகை நோய் தீரும். வல்லாரை இலையை தின்று வர உடல் உஷ்ணம் தணியும்.
* வல்லாரை இலைகளை அரைத்து புண்கள் மீது தடவி வர, புண்கள் சீக்கிரத்தில் ஆறும்.
* வல்லாரையை இடித்தெடுத்துப் பிழிந்த சாறு அரைலிட்டர் நல்லெண்ணெய் அல்லது தே.எண்ணெய் அரைலிட்டர் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து எரிக்க, அடிமண்டி மெழுகு போல விரலால் உருட்டும் போது திரளும் பதத்தில் இறக்கி வடிகட்டி தினந்தோறும் தலையில் தடவியும், தேய்த்துக் குளித்தும் வர, மூளைத்தெளிவு, குளிர்ச்சி தந்து நரையைத் தடுக்கும்.
* வல்லாரை இலையை பால் கலந்து அரைத்து, விழுதை நெல்லிக்காய் அளவு உண்டு வர நரை, திரை அகலும். இளமைத் தோற்றம் திரும்பும். எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் நீங்கும் என்று கூறுவார்கள்.
* வல்லாரைச் சாறு, தேனுடன், மணத்தக்காளிச் சாறையும் கலந்து காமாலை கண்டவர்களுக்குக் கொடுப்பார்கள். இதனால் அதிவிரைவில் காமாலை குணமாகும்.
* வல்லாரை இலையுடன் வெந்தயமும் சேர்த்துக் குடிநீரிட்டு, 1 அல்லது 2 சங்கு குழந்தைகளுக்குப் புகட்ட, ஜுரம், வயிற்றுக் கோளாறுகள் தீரும்.
* வல்லாரை கீரையை அனுதினமும் உணவில் சேர்த்து வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உடல் வலிமை பெறும்.
* வல்லாரையை பால் விட்டு அரைத்து காலை, மாலை சாப்பிட இளமை பெருகும்.

முடக்கற்றான்

முடக்கற்றான்

தாவர இயல் பெயர்: Cardiospermum halicacabum
இதன் மறு பெயர்கள்: முடர்குற்றான், முடக்கறுத்தான்
வளரும் இடங்கள்: உலகெங்கிலும் உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் காணக் கிடைக்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து கிராமப்புறங்களிலும் காணக் கிடைக்கிறது.
பயன் தரும் பகுதிகள்: முழுத்தாவரம் உட்பட குறிப்பாக இலை, வேர் என அனைத்துமே பயன்தரும் பகுதிகள் தான்.
பொதுவான தகவல்கள் : முடக்கொத்தான் (முடக்கறுத்தான் Cardiospermum halicacabum) ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். இது உயரப் படரும் ஏறுகொடி. இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இக்கொடியின் வேர், இலை, விதை ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்பாடுடையவை தான்.
முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம் ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum , ஆகும்.
இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். ஆம். இது மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது நிச்சியம்.
"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-
பொருள் : கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.
முடக்கற்றான் கொடி வகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில் தான் முடக்கற்றான் பயிராகும். தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின் மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்க முடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின் தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.
இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண் நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.
இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிறமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.
இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:-
ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.
மருத்துவப் பயன்கள்:
* முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.
* மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.
* கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.
* சுக பேதியாக : ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒரு சட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்து இதில் போட்டு அரைத் தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். ஒரு வேளை அதிகமாக பேதியினால் ஒரு எலுமிச்சை பழச்சாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம் மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம். முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் மூட்டு வலி உடனே நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்து எடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.
* முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்தி வர நாள்பட்ட இருமல் குணமாகும்.
* சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.
* முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியை முறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.
* முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்தி வர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.
* முடக்கற்றான் இலைகள் தடவப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தினை தூண்டுகிறது. நச்சுப் பொருள்கள் வெளியேறுவதிலும் உதவும். முழுத் தாவரமும் துயில் தூண்டுவியாகும்.
* முடக்கற்றான் இலையின் சாறு தோல் நோய்களுக்கு மேல் பூச்சாக தடவப்படுகிறது.

மிளகு

மிளகு

தாவர இயல் பெயர்: Piper nigrum
இதன் மறு பெயர்கள்: அரிசு, அருட்டம், தீச்சந்தனம், கமி, கறி, நெப்பம், மல்வாசம், நெறியல்
வளரும் இடங்கள்: மேற்குத் தொடர்ச்சி மலைகள், கேரளா
பயன் தரும் பகுதிகள்: இது கொடி வகையை சேர்ந்ததாகும். இதன் சிறுகனிகள் பூத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் அறுவடைக்கு வரும். இது தவிர மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும்.
பொதுவான தகவல்கள் : மிளகு (பைப்பர் நிக்ரம் Piper nigrum) என்பது 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த, பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
மிளகில்,அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகுக் கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது. மிளகின் வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம். தென்னிந்திய மொழிகளில் இத்தாவரம் தமிழில் மிளகு எனவும், கன்னடம்:மெனசு (menasu) மலையாளம்: குறு மிளகு(Kuru Mulagu) தெலுங்கு: மிரியாலு அல்லது மிரியம் (miriyam) கொங்கணி: மிரியாகொனு (Miriya Konu) எனவும் அழைக்கப்படுகிறது.
மிளகுக் கொடி, பொதுவாக வெப்ப மண்டலத்தை சார்ந்த தாவரமாக இருப்பதால், தென்னிந்தியாவின் தட்பவெப்ப நிலை இதன் வளர்ச்சிக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மிளகின் காரத்தன்மை அதிலுள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளால் எற்படுவதாகும். பொடியாக்கப்பட்ட மிளகை உலகின் பெரும்பான்மையான நாடுகளில், சமையலறைகளிலும், உணவு உண்ணும் மேசைகளிலும் காணலாம். மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும்.
மிளகின் வரலாறு:-
இந்தியாவை இயற்கை வாழிடமாகக் கொண்ட மிளகு, வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டே இந்தியச் சமையலில் முக்கிய தாளிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிளகு தற்போது சிறந்து விளங்கினாலும், இந்தியாவில் உள்ள கேரளக் கடற்கரைப் பகுதி, நெடுங்காலமாகவே மிளகு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிளகு வாணிகம் மிக லாபகரமானதாக இருப்பதனால், மிளகை 'கருப்புத் தங்கம்' என்று குறிப்பிடுகின்றனர். பண்டைக் காலத்தில் இப்பகுதியில் பணத்திற்கு பதிலாக மிளகை உபயோகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
இடைக்காலத்தில் இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விளைந்த மிளகு உலகமெங்கும் சந்தை படுத்தப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர் போன்ற தீவுகளிலும், இந்தோனேசியா, மற்றும் பல கிழக்காசிய நாடுகளிலும் குறைந்த அளவில் பயிரிடப்பட்டது.
இவ்விடங்களில் விளைந்த மிளகு சீனாவிலும், உள்நாட்டிலுமே விற்கப்பட்டதால், ஐரோப்பாவின் மிளகு வணிகம் இந்தியாவை நம்பியே இருந்தது. இந்தியாவில் பெரிதும் விளைந்த மிளகும், பிற நறுமணப் பொருள்கள் உற்பத்தியும் உலக வரலாற்றை மாற்றி அமைத்ததாகக் கூறினால் அது மிகையாகாது. லண்டனில் டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததன் காரணத்தால் தான் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனமே துவங்கப்பட்டது. ஐரோப்பியக் குடும்பங்களில் ஒரு பெண் திருமணமாகி வரும்போது சீதனமாக மிளகு கொண்டுவருகிறாள் என்பது அவளது செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில், நறுமணப் பொருள்களின் தேவை மிக அதிகமாக இருந்ததினாலும், அப் பொருள்கள் மிக விலை உயர்ந்ததாக இருந்ததாலும், அவற்றின் இறக்குமதியை அதிகப்படுத்தும் பொருட்டு, இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடிக்க பலர் முயன்றனர். இதன் வாயிலாகவே இந்தியாவிற்கான கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டது. இம்முயற்சிகளே பின்னர், இந்தியாவை ஐரோப்பியர் கைப்பற்றி அரசாளவும், அமெரிக்கா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்துக் குடியேற்றம் செய்யவும் வழிவகை செய்தது.
மிளகை பண்டைய காலத்தில், இலத்தீன் மொழியில் பைப்பர் என்று குறிப்பிட்டனர். பழம்பெரும் நாகரிகமான எகிப்து நாகரிகத்தின் எச்சங்களாக விளங்கும், பிரமிடுகளில் பதப்படுத்தப்பட்டுள்ள இறந்த அரசர்களின் மூக்கு துவாரங்களில் மிளகு காணப்பட்டதன் மூலம் பண்டைய எகிப்து நாகரிகத்தில் மிளகு சிறந்த மருத்துவப் பொருளாகவும், விலையுயர்ந்த பொருளாகவும் மதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம். கி.மு. 1213 ஆம் ஆண்டில், எகிப்தின் அரசனான இரண்டாம் ராம்சிஸ் இறப்பின் போது நடத்தப்பட்ட இறுதி சடங்குகளில் மிளகு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும், மிளகின் பயன்பாடு எந்த அளவில் பண்டைய எகிப்து நாகரிகத்தில் இருந்தது என்பது பற்றியும், எவ்விதம் மிளகு இந்தியாவிலிருந்து எகிப்து வரை கொண்டு செல்லப்பட்டது பற்றியும் அறிய இயலவில்லை.
பண்டைய கிரேக்க நாகரிகத்திலும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் மிளகு மிகக்குறைந்த அளவில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மிக விலையுயர்ந்த பொருளாகவும், பெரும் தட்டுப்பாடுடைய பொருளாகவும் இருந்ததால், செல்வந்தர் மட்டுமே மிளகின் சுவையை அறிந்திருந்தனர். வாணிக வழிகள் நிலமார்க்கமாகவோ, அரபிக்கடலின் கடலோரமாக நீர்மார்க்கமாகவோ இருந்ததினால், மிளகு வாணிகம் குறைந்த அளவிலே நடைபெற்றது.
கி.மு. 30 இல், எகிப்து ரோமப் பேரரசின் பகுதியான பின், தென் இந்தியாவின் கேரளக் கடற்கரையில் இருந்து அரபிக் கடலின் வழியே ஐரோப்பாவுக்கு முறையான வணிகக் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்டது. ரோமப் பேரரசின் வரலாற்று சான்றுகள் மூலம், ஆண்டுதோறும் சுமார் 120 வாணிகக் கப்பல்கள் இந்தியாவுக்கு பருவக்காற்று காலங்களில் வந்ததாக அறிய முடிகிறது. இக்கப்பல்களில் கொண்டு செல்லப்பட்ட நறுமணப் பொருள்களும், முத்து, வைரம் போன்ற கற்களும், மத்திய ஆசியாவில் உள்ள செங்கடல் வரை கொண்டு செல்லப்பட்டு, பின் நிலவழியாகவோ, நைல் ஆற்றின் கால்வாய்கள் வாயிலாகவோ, மத்தியதரைக் கடல் வரை எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் கப்பல் மூலமாக ரோம் நகருக்கு அனுப்பப்பட்டன. இந்தியாவுக்கு நேரடிக் கடல்வழி கண்டுபிடிக்கப்படும் வரை இத்தகைய கடுமையான பாதைகளின் மூலமே ஐரோப்பிய மிளகு வாணிகம் நடைபெற்றது.
மிளகுக் கொடி:-
சுமார் நான்கு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மிளகுக் கொடி ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். படரும் கொடி வகையைச் சார்ந்த இத்தாவரம், அருகில் இருக்கும் மரம், தூண், கயிறு ஆகியவற்றை பற்றி படரும் தன்மையுடையது. இதன் கொடி 10 -12 அடிக்கு மேல் கெட்டியான பட்டையுள்ள மரத்தில் பற்றி வளரும். முக்கியமாக முள் முருங்கையில், இக்கொடிகள் மரங்களைப் பின்னிப் பிணைந்து அடர்த்தியாக வளரும். மிளகின் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இத்தாவரத்தின் இலைகள் சுமார் ஐந்து சென்டிமீட்டர் முதல் பத்து சென்டிமீட்டர் நீளத்தில், சுமார் மூன்று சென்டிமீட்டர் முதல் ஆறு சென்டிமீட்டர் அகலத்தில் காணப்படுகின்றன. எப்பொழுதும் பசுமையாகவும், கொடியின் கணுக்கள் சிறிது பெருத்தும் காணப்படும். இதன் சிறிய மலர்கள் சுமார் எட்டு சென்டிமீட்டர் நீளமுள்ள ஊசியைப் போன்ற தோற்றமுடைய மலர்க்காம்பில் பூக்கும். மலர்கள் காய்களாக வளர்ச்சி பெறும்போது, இம்மலர்க் காம்புகள், சுமார் 15 சென்டிமீட்டர் வரை வளர்ச்சி பெறுகிறது. இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். பச்சையாக எடுத்து அதன் நிறம் மாறாமல் பதம் செய்தும் வைப்பார்கள். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் அது கரு மிளகாகச் சுண்டி சிறுத்துவிடும். இதுவே மிளகாகும்.
மிளகு பயிரிடுதல் மற்றும் அதன் விளைச்சல்:-
மிளகு விளைச்சலுக்கு நீண்ட மழைபொழிவு, சீராண உயர் வெப்பம் ஆகியவை தேவை மிளகு இந்தியாவில் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு மிளகு பயிரிடும் முறை பரவியது. 16 ம் நூற்றாண்டில் ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர் மற்றும் மலேசியாவுக்குப் பரவியது. மிளகுக் கொடி மிதமான ஈரப்பதமிக்க, வளமான மண்ணில் நன்கு வளரக்கூடியது. 40 முதல் 50 சென்டிமீட்டர் நீளமுள்ள துண்டங்களாக இக்கொடியின் தண்டுப் பகுதியை, வெட்டி நடுவதின் மூலம் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. பொதுவாக மரங்களின் அருகாமையில் வளர்க்கப்படும் இக்கொடி அம்மரங்களைப் பற்றி வளரும் வண்ணம் மரபட்டைகள் நிறைந்த மரங்களுடன் வளர்க்கப்படுகின்றன. முதல் மூன்று ஆண்டுகள் இத்தாவரம் மிகுந்த கவனிப்புடன் வளர்க்கப்படுகிறது. நான்காம் ஆண்டு முதல் ஏழாம் ஆண்டு வரை இக்கொடி பூத்துக் காய்க்கிறது. ஒவ்வொரு காம்பிலும் சுமார் 20 முதல் 30 பழங்கள் காணப்படுகின்றன. ஒரு காம்பில் உள்ள சில காய்கள் சிவப்பு நிறமாகிப் பழுத்தவுடன், காம்புகள் அறுவடை செய்யப்படுகின்றன. பின் வெயிலில் காய வைக்கப்பட்டு, காய்ந்தவுடன், காம்புகளில் இருந்து பிரிக்கப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன.
மிளகின் வகைகள் ஒரு பார்வை:-
1. வால் மிளகு: வால்மிளகு (Piper Cubeba) என்பது, ஒரு வகையான மூலிகைக் கொடியில் காய்ப்பதாகும். மிளகின் ஒரு வகையான இது மிளகைப்போலவே, ஆனால் காம்புடன் இருப்பதால், வால்மிளகு எனப் பெயர் பெற்றது. இதன் மணத்திற்காக சமையலில் பயன்படுத்தப் படுகிறது. மேலும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இதன் காரத்தன்மையால், பசியினைத் தூண்டுவது மற்றும் உடல் வெப்பத்தை அதிகரிப்பது ஆகிய குணங்களைக் கொண்டுள்ளது. சித்த மருத்துவத்தில், பல்வேறு நோய்களைத் தீர்ப்பதற்கு பயன்படுகிறது.
2. கருமிளகு : பச்சையான பழுக்காத சிறு மிளகு காய்கள் கொடிகளில் இருந்து பறிக்கப்பட்டு, சூடான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு, பின்னர் உலர வைக்கப்படுகின்றன. இக்காய்களின் வெளித்தோல் சூட்டினால் உறிக்கப்படுவதனால், இக்காய்கள் வேகமாக உலருவதோடு, அதன் சதைப்பகுதி விதையுடன் காய்ந்து, சுருங்கி, பூஞ்சைகளின் மூலமாகக் கருநிறத்தைப் பெறுகிறது. இக்காய்களை உலர்த்துவதற்கு இயற்கையான சூரிய ஒளியும், பல இயந்திரங்களும், இடத்திற்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உலர்த்தப்பட்ட மிளகு, பின் சரியான பொதிகளில் அடைக்கப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.
3. வெண்மிளகு : பெரும்பான்மையான நாடுகளில் கருமிளகே உபயோகத்தில் இருப்பினும், சில பகுதிகளில், வெண்மிளகும் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய வழிமுறைகளைப் போலின்றி, வெண்மிளகு உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்படுகின்றன. இதன் மூலம், பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்படுகிறது. பின், பழத்தின் சதைப் பகுதி தேய்த்து அகற்றப்பட்டு, விதைகள் உலர்த்தப்படுகின்றன. உலர வைக்கப்பட்ட வெண்நிற விதைகள் வெண்மிளகாக சந்தைப்படுத்தப்படுகிறது. மற்ற சில முறைகளும் உபயோகத்தில் உள்ளன. இவற்றில் சிலவற்றில் பழுக்காத மிளகுக் காய்களும் வெண்மிளகு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
4. பச்சை மிளகு : பச்சை மிளகு, கருமிளகைப் போலவே பழுக்காத சிறு மிளகுக் காய்களை உலர வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. காய்களின் பச்சை நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ள, கந்தக டை ஆக்சைடுடன் கலக்குதல், உறைய வைத்து உலர்த்துதல் ஆகிய சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வினிகருடன் ஊற வைக்கப்பட்ட பச்சை மிளகுக் காய்களும் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. ஆசிய சமையல் முறைகளில் ஒன்றான, தாய்லாந்து நாட்டுச் சமையல் முறையில், புதிதாக பறிக்கப்பட்ட பச்சை மிளகுப் பழங்கள் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. உலர வைக்கப்படாத அல்லது பாதுகாக்கப்படாத மிளகுக் காய்கள் விரைவில் கெடும் இயல்பு கொண்டவை.
5. சிவப்பு மிளகு: வினிகரில் ஊற வைத்து பாதுகாக்கப்பட்ட பழுத்த மிளகு சிறு பழங்கள், இளஞ்சிவப்பு மிளகு என்றும், சிவப்பு மிளகு என்றும் அழைக்கப்படுகிறது. பழுத்த மிளகுப் பழங்களை சில வேதியல் பொருள்களின் துணையுடன் உலர வைப்பதன் மூலமும் சிவப்பு மிளகு தயாரிக்கப்படுகிறது.
தமிழகத்து சமையலில் மிளகு:-
தமிழ்நாட்டுச் சமையலில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு உணவு வகைகளான பொங்கல், மிளகு ரசம், மிளகுக் கோழி வருவல், முட்டை வருவல், உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றில் சுவை கூட்டும் பொருளாக மிளகு அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற சமையல் முறையான செட்டிநாடு சமையலில் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சமையலில் காரச்சுவை ஊட்டுவதற்காக முற்காலத்தில் மிளகு பயன்பட்டது. தற்போது மற்றொரு காரச்சுவைப் பொருளான மிளகாய், மிளகை விட அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில், மிளகை பெப்பர் என்றும், மிளகாயைச் சில்லி பெப்பர் என்றும் பொதுவாகக் குறிக்கின்றனர்.
சர்வதேச அளவில் மிளகு வாணிகம்:-
மிளகு ரகங்கள் அவை விளையும் இடங்களின் பெயரிலேயே உலகச் சந்தைகளில் அறியப்படுகின்றன. மிகப் புகழ்பெற்ற இந்திய வகைகளாக அறியப்படுவன : மலபார் மிளகு மற்றும் தாலச்சேரி மிளகு. இதில் தாலச்சேரி மிளகு உயர்தரமாக மதிக்கப்படுகிறது. மலேசியா நாட்டின் சரவாக் மிளகு , போர்ணியோத் தீவிலும், இந்தோனேசியா நாட்டின் லம்பூங் மிளகு சுமத்திராத் தீவுகளிலும் விளைகிறது. 2002 ஆம் ஆண்டில், மிளகு, உலக தாளிப்புப் பொருள் வாணிபத்தில் சுமார் 20 விழுக்காட்டினைப் பெற்றது. மிளகின் விலை உலகச் சந்தையில் உற்பத்திக்கேற்ப வெகுவாக மாறக்கூடியது. சர்வதேச மிளகுச் சந்தை கொச்சி நகரில் அமைந்துள்ளது.
தற்காலத்தில், வியட்நாம் நாடு உலக மிளகு ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. வியட்நாமிலிருந்து, 2003 ஆம் ஆண்டில், சுமார் 82,000 டன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது. வியட்நாமை அடுத்து, இந்தோனேசியா (67,000 டன்), இந்தியா (65,000 டன்), பிரேசில் (35,000 டன்), மலேசியா (22,000 டன்), இலங்கை (12,750 டன்), தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளும் மிளகு ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளன.
மிளகின் மருத்துவ குணங்கள்:-
1. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன
2. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
3. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது.
4. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. 5. உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.
6. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.
7. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.
மிளகின் விரிவான மருத்துவப் பயன்கள்:
* மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
* மிளகு, சுக்கு, சிற்றரத்தை, அதி மதுரம் ஆகிய இவற்றை சமமாக எடுத்துக் கஷாயம் செய்து மூன்று வேளை குடித்து வர ஜலதோஷத்தோடு உள்ள ஜூரமும் இருமலும் குணமாகும்.
* சின்ன வெங்காயம், மிளகு, கிராம்பு இவைகளை மையாக அரைத்து சிறிது தேனில் கலந்து சாப்பிட்டு வர, நெஞ்சுவலி நீங்கும்.
* அடுக்குத் தும்மல் பிரச்சனை அடிக்கடி வருகிறதா? எனில், மிளகை தூள் செய்து அந்தப் பொடியை நெருப்புத் தணலில் இட்டு அதிலிருந்து வரும் புகையை இழுக்க அடுக்குத் தும்மல் நின்று விடும்.
* மிளகுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும். சளித் தொல்லை இருக்காது.
* இருமல் தொந்தரவு இருந்தால் டீ அல்லது பாலில் மிளகு, ஏலக்காய், இஞ்சி, ஓமம் ஆகியவற்றை அரைத்துப் போட்டு குடியுங்கள் இருமல் பிரச்சனை நீங்கும்.
* நொச்சி இலையுடன் ஒரு தேக்கரண்டி மிளகை தட்டிப் போட்டு கஷாயம் வைத்துக் குடித்தால் மலேரியா ஜுரம் கட்டுப்படும்.
* கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சிறிது சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.
* மிளகை தினமும் சமையலில் பயன்படுத்தி வர பல் வலியில் இருந்து முடக்கு வாதம் வரையிலான அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கும்.
* மிளகை கடித்துச் சாப்பிட்டால் பல் ஈறுகளுக்கு பலம் கிடைக்கும்.
* மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
* ஞாபக மறதி நோய் உள்ளவர்கள் மிளகைப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.
* வயிறு மந்தமாக இருந்தால் கால் தேக்கரண்டி அளவு மிளகுப் பொடியை மோரில் கலந்து குடித்தால் உடனே நிவாரணம் கிடைக்கும். இது தவிர, வாயு சம்மந்தமான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மிளகு அரும் மருந்தாக உள்ளது.
* மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.
* கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகும் .
* ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.
* மிளகைப் பொடி செய்து குழந்தைகளுக்கு முட்டை ஆம்லெட் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.
* மிளகை தட்டிப் போட்டு காய்ச்சிய பாலில் அதனை போட்டு இரவில் குடித்தால் ஜலதோஷம் தலைபாரம் குறையும்.
* மிளகு சேர்த்து சமைக்கின்ற உணவு சீக்கிரத்தில் கெட்டுப் போகாது.
* மிளகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா எல்லாம் சேர்த்து அரைத்த விழுதை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறு நீங்கும்.
* ஏழு, எட்டு மிளகை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, அந்தத் தண்ணீரைக் குடித்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
* மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* தினமும் பத்து மிளகை உண்டு வர ரத்தம் சுத்தமாகும்.
* மிளகை தினமும் உணவில் சேர்த்து வர செரிமான சக்தி அதிகரிக்கும்.
* கனிந்த வாழைப் பழத்தின் உள்ளே மிளகுப் பொடியை வைத்து வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் விரைவில் ஆஸ்துமா நோய் குணமாகும்.
* மிளகு, ஜாதிக்காய், சந்தனம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருத் தொல்லைகள் வராது. முகம் பளபளக்கும்.

Thursday, March 8, 2018

பிரண்டை

பிரண்டை

தாவர இயல் பெயர்: Cissus quadrangularis/ Vitis quadrangularis/ Vitis setosa
இதன் மறு பெயர்கள்: தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, கிரண்டை, அரிசிணி
வளரும் இடங்கள்: இந்தியாவில் அனைத்து வெப்பமான பகுதிகளிலும் காணக் கிடைக்கிறது; தோட்டங்களில் கூட வளர்க்கப்படுகிறது. தெற்காசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளிலும் வளர்கிறது.
பயன் தரும் பகுதிகள்: இளம் தண்டு, இலை, வேர்கள் ஆகிய அனைத்துமே பயன் தருகிறது.
பொதுவான தகவல்கள் : பிரண்டை அல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும்.
நீர்ப்பற்றான இதன் தண்டு (கொடி) நான்கு பக்க விளிம்பு கொண்டது. பூக்கள் வெள்ளை நிறமானவை; பழம் கறுப்பு நிறமானதாகும்.
பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்தப் பிரண்டை உடைந்த எலும்புகளை இணைக்கும் தன்மை உடையது. இதனைப் பதப்படுத்தி உண்ண விந்து உற்பத்தியாகும். எனினும் பித்தத்தையும் வளர்க்கும். ஆனால் வாத கபங்களைத் தணிக்கும்.
மூன்று பட்டைகளைக் கொண்ட பிரண்டையை திரிதார என்று அழைப்பார்கள். இந்த வகைப் பிரண்டை இனிப்புச் சுவையையும் இலகு குணமும் வறட்சித் தன்மையும் கொண்டு இருக்கும்.
நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டையை சதுர்தார என்று அழைப்பார்கள். இது உஷ்ண வீரியம் உள்ளது.
பிரண்டையில் உருண்டை, சதுர வட்டை, முப் பிரண்டை, மூங்கிற் பிரண்டை, கோப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு.
வாய், உணவுக் குழல், இரைப்பை, சிறு குடல், பெருங்குடல், ஆசனவாய் ஆகிய இவைகளில் ஏற்படும் அனைத்து வகை பிணிகளுக்கும் பிரண்டை நல்ல மூலிகை மருந்தாக உள்ளது.
பிரண்டையின் மருத்துவப் பயன்கள்:-
* தமிழகம் முழுவதும் தானே விளைந்து பயன்படுத்துவோரின்றி வீணே போவது பிரண்டை.சதைப்பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு கொடி. பற்றுக் கம்பிகளும்,மடலான இலைகளும் கொண்டிருக்கும். இதன் சாறு உடலில் நமைச்சல் ஏற்படுத்தும்,சிவப்பு நிற உருண்டையான சதைக்கனிகளை உடையது.வேர்,தண்டு ஆகியவை மருத்துவகுணம் உடையவை, இதன் இன்னொரு பெயர் வச்சிரவல்லி. வாருங்கள் இதன் முக்கிய மருத்துவப் பயன்களைக் காண்போம்.
* இதன் தண்டுகளில் நார் நீக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் செரியாமை நீக்கும்.
* பிரண்டை சாற்றில் புளி,உப்பு,கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பிழற்சி,அடிபட்ட வீக்கம்,எலும்பு முறிவு,வீக்கம் தீரும். கடைகளில் கிடைக்கும் பிரண்டை உப்பு 2 அரிசி எடைஅளவு 3 வேளை பாலில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி,சீதபேதி,நுரைத்த பச்சை பேதி தீரும்.
* பிரண்டை உப்பினை 2அ3 அரிசி எடையளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு, நாக்கு வெடிப்பு தீரும்.
* பிரண்டை உப்பினை 1 குண்டுமனி வீதம் வெண்ணெய்யுடன் சாப்பிட்டு வர சிறுகுடல்,பெருங்குடல்,இரைப்பை புண்கள்,தீராத நாட்பட்ட வயிற்றுவலி,மூலம்,மூல அரிப்பு,மலத்துடன் சீழ்,இரத்தம் வருதல் தீரும்.
* சாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி, பலவீனம், தாது இழப்பு ஆகியவை தீரும்.
* பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 1 கிராம் அளவு காலை,மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.
* பிரண்டையை இடித்துச் சாறு எடுத்து அந்த அளவில் கால் பங்கு புளியும், கால் பங்கு உப்பும் சேர்த்துச் சுண்டைக் குழம்பு போல காய்ச்சி இறக்கி அதனை இளசூட்டுடன் அடிபட்ட வீக்கத்தின் மேல் கனமாகப் பூசி வந்தால் வீக்கம் வாடும். சுளுக்கு, உடல் வலி போன்றவை கூட நிவர்த்தியாகும்.
* பிரண்டை உப்பு இரண்டு அரிசி எடை எடுத்துப் பாலில் கலந்து மூன்று வேளை குடித்து வர சிறு குழந்தைகளின் பேதி, வாந்தி, சீதபேதி நுரைத்த பச்சை பேதி நிற்கும்.
* மிளகு அளவு பிரண்டை உப்பை பசும் வெண்ணையில் குழைத்து 2 வேளை சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு, இரத்தம் தடைபடுதல், குத்துக் கடுப்பு ஆகிய அனைத்தும் குணமாகும்.
* பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வர அஜீரணம் குணமாகும்.
* பிரண்டையை நெய் விட்டு வறுத்து, அரைத்துக் கொட்டைப்பாக்கு அளவு 8 நாள் காலை, மாலை சாப்பிட கருவாயின் தினவும், குருதிப் போக்கும் ஒழியும்.
இவ்வளவு குணநலங்கள் கொண்ட பிரண்டையின் பயன்பாடு மிகவும் குறைந்து போய் விட்டது வருத்தமான ஒன்று.
பிரண்டையின் இதர பயன்பாடு:-
1. பிரண்டையைக் கொண்டு சட்டினி மற்றும் வடகம் செய்யலாம்.
2. இந்துக்களின் மரண நல்லடக்கங்களில் சவக்குழியில் பிரண்டை நடப்படுகிறது.

நெல்லிக்கனி

நெல்லிக்கனி

தாவர இயல் பெயர்: Phyllanthus emblica, Embelic Myrobalan, Euphorbiaceae, Linn.
இதன் மறு பெயர்கள்: அந்தோர், ஆமலகம், அமுதம், அந்தகோளம், அத்தகோரம்
வளரும் இடங்கள்: இந்தியாவை தாயகமாகக் கொண்ட நெல்லி சீனா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் அதிகம் காணக் கிடைக்கிறது. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரையில் காஷ்மீர் முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் காணக் கிடைக்கிறது.
பயன் தரும் பகுதிகள்: இலை, காய், வற்றல், வேர், பட்டை, பூ, விதை எனப் பெரும்பாலும் எல்லா பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை தான்.
பொதுவான தகவல்கள் : நெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.இது உயரமான இலையுதிர் மரமாக அறியப்படுகிறது. இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்.
வளரியல்பு:-
நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்துக், கொத்தாக அடர்த்தியாக வளரும். ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய் ஆகும்.
மலைகளில் நன்றாக விளையும். மற்றைய நிலங்களில் சுமாராக விளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும். அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக் காய்களை உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது. இலையடி செதில் மிகச் சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும், பெண் பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும், கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும். பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின் எண்ணிக்கையை விடக் குறைவாக இருக்கும். பூ இதழ்கள் ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பலவீனப் பட்டதாக இருக்கும். உருண்டை வடிவமானது. சதைப்பற்று உள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்று கோணங்கள் உடையது. விதையுறை கடினமாக இருக்கும். ஒட்டுச் செடிகள் 3 வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6 வருடங்கள் கூடச் செல்லலாம். நெல்லி விதை மூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் அது மிகையாகாது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.
இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.
அவர்கள் முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்களே! அது எப்படி என்று நாம் பார்த்தோமானால் அதற்கு அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும் தான் முக்கியக் காரணம் ஆக உள்ளது. முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாகக் கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவும், உடற்பயிற்சி இன்மையுமே.
இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில் நெல்லிக்கனியின் சிறப்பை பற்றி கீழ்க்கண்ட பாடல் மூலம் விவரிக்கிறார்.
“மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்”
பொருள் : முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிட வேண்டும். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.
நெல்லிக்கனி மூப்பை தடுக்கும் முறை:-
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர்.
நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது.
ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.
நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம்.
சங்க காலம் தொட்டு நெல்லிக்கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்ததில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றிப் பாடி உள்ளனர்.
இந்த நெல்லிக்கனியில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம் பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது.
நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.
நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:
* ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
* ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
* நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
* எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.
நெல்லிக்கனியின் மேலும் பல மருத்துவப் பயன்கள்:-
* தலைவலியால் தாக்கப்பட்டவர்கள் அல்லது தலைக் கனமாக இருப்பதாக உணர்பவர்கள் நெல்லி முள்ளி (அ) நெல்லிக்கனியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டுக் கொண்டால் சீக்கிரத்தில் நிவாரணம் பெறலாம்.
* பயற்றம் பருப்பு மாவுடன், இந்த நெல்லி முல்லையின் பொடியையும் கலந்து, உடலில் தேய்த்துக் குளித்து வந்தால், சருமம் மழ மழப்பாகி நன்றாய் பள பளத்துக் காட்டும்.
* நெல்லிக்காய் கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும். மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் கல்லீரல் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
* நெல்லிக்காயை ஊறுகாயாக சாப்பிட உடலில் வீரியம் பெருகும்.
* தினமும் ஐந்து நெல்லிக்கனிகளை சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
* தினம் ஐந்து நெல்லிக்காயை தின்று வர, உடலின் இரத்த ஓட்டத்தை அது மேம்படுத்தும். மேலும் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால், அவற்றைத் தடுத்து, இதயத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
* நெல்லிக்காய் சாறு, தேன், எலுமிச்சம் பழச்சாறு வகைக்கு 15 மில்லி அளவு எடுத்துக் கலந்து காலையில் மட்டும் குடித்து வர மது மேகம் குணமாகும்.
* சாதாரண வயிற்றி வலி முதல் தீவிரமான வயிற்று அலற்றி வரையில் குணமாக்கும் ஆற்றல் நெல்லிக்கனிக்கு உண்டு என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
* சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் தினமும் 1 நெல்லிக் காயை சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
* பயற்றம் பருப்பு மாவுடன், இந்த நெல்லி முல்லையின் பொடியையும் கலந்து, உடலில் தேய்த்து குளித்து வந்தால், சருமம் மழ மழப்பாகி நன்றாய் பளபளத்துக் காட்டும்.
* நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களின் ரெட்டினாவை பாதுகாக்கும். இதில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், பார்வை மேம்படுவதோடு, கண்களில் இருந்து தண்ணீர் வருவது, கண் எரிச்சல், கண்கள் சிவப்பது போன்றவை தடுக்கப்படும்.
* நெல்லி இலையை நீரில் கைப்பிடி அளவு போட்டுக் காய்ச்சி வடி கட்டிக் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.
* சில நெல்லிக்காய்களை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு குழைத்து தலைக்கு தேய்த்து ஊறிய பிறகு குளித்து வந்தால் முடி உதிர்வது நின்று அடர்த்தியாக வளரும்.
* நெல்லிக்காயுடன் தாமரையின் இலை, இதழ்களையும் வைத்து அரைத்து உடம்பில் அடிபட்டு வீங்கி இருக்கும் பகுதிகளில் தடவினால் வீக்கம் வடிந்து விடும்.
* நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். மேலும் நெல்லிக்காய் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தும். அதிலும் நெல்லி பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
* நெல்லிக் காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தீர்த்து வைக்கும்.
* நெல்லிக்காயை தினமும் நன்கு மென்று தின்று வர ரத்தசோகை நீங்கும்.
* நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி தீர, கொட்டை நீக்கிய நெல்லிக்காயை இடித்து இரண்டு அவுன்ஸ் சாறு எடுத்து அதில் அதே அளவுக்கு தேன் கலந்து கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து இதை கொஞ்சம் கொஞ்சமாக தினசரி காலையில் பருகி வரவும்.
* பெரு நெல்லியை வெந்நீரில் அலசி தயிரில் ஊற வைத்து சாப்பிடலாம். இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி, வீரியம் அதிகரிக்கும்.
* நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் ஆய்விலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும் என்று தெரிய வந்துள்ளது.
* நெல்லிக்காய் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். நெல்லிக்காயில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை தினமும் ஒன்று என்ற விதத்தில் உட்கொண்டு வந்தால், புதிய இரத்த செல்கள் உருவாகி, மறைமுகமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும்.
* சிறிதளவு நெல்லிக்காயை எடுத்துத் துண்டு துண்டாக நறுக்கிக் கொண்டு, நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் எண்ணெயில் போட்டு நெல்லிக்காய் கருப்பாக மாறும் வரை சட்டியில் வைக்க வேண்டும். இந்த கருத்த எண்ணெய் தலை முடி நரைப்பதை தடுக்க அருமையான மருந்து.
* அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.
* நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு அதனால் உடல் எடை குறையும்.
* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்துக் குடிக்க வேண்டும்.
* நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக தினம் ஒரு நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் முகப்பரு, பிம்பிள் போன்றவை வராது.
* நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வராமல் தடுக்கும்.