


துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி என்ற தேவதைகளின்பொருட்டு புரட்டாசி மாதம் வளர்பிறையின் முதல் நாளிலிருந்து ஒன்பது நாள் கொண்டாடப்படும் திருவிழா நவராத்திரி ஆகும்.
இந்த ஆண்டு இன்று (அக்டோபர் 9ஆம் தேதி) ஆரம்பமாகும் நவராத்திரி அக்டோபர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியை முன்னிட்டு இன்று கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம்.
நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள்.
கலசம் வைத்து அதில் தேவியை எழுந்தருள வைத்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானது. நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும்.
மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். இது நவராத்திரி வழிபாட்டின் சிறப்பான அம்சமாகும்.
நவராத்திரியை அடுத்து வரும் பத்தாம் நாள் விஜயதசமி எனச் சிறப்பித்துக் கூறப்படும் இத்தினத்தில் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குதல், கலைப்பயிற்சிகளைத் தொடங்குதல் என்பன நடைபெறும்.
விஜய தசமியன்று ஆயுத பூஜை நடத்தப்படும். முற்காலத்தில் நவராத்திரி விரத காலத்தில் “தேவி மகாத்மியம்” என்ற நூலைப் பாராயணம் செய்யும் வழக்கம் பேணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் சகலகலாவல்லி மாலை முதலான நூல்களைப் பாராயணம் செய்யும் வழக்கம் உள்ளது. இதோ சகலகலாவல்லிமாலையை
பாடியும் தேவியரை துதிப்போம்.
பாடல் 1
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே!
பாடல் 2
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே
பாடல் 3
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!
பாடல் 4
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
பாடல் 5
பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே
பாடல் 6
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே
பாடல் 7
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே!
பாடல் 8
சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே
பாடல் 9
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே
பாடல் 10
மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!
நவராத்திரி பெரும்பாலும் பெண்கள் அனுட்டிக்கும் விரதமாகும்.
நவராத்திரி வகைளில் சாரத நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பன முக்கிய மானவை ஆகும். வசந்த காலத்தில் நிகழும் நவராத்திரி வழிபாடு வசந்த நவராத்திரி எனப்படும். இது சிலாபத்திலுள்ள முன்னேஸ்வர ஆலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
காலத்தில் நிகழும் நவராத்திரி வழிபாடு சரத் காலத்தில் நிகழும் நவராத்திரிவழிபாடு சாரத நவராத்திரி எனப்படும். இது புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை தொடக்கம் நவமி வரை உள்ள ஒன்பது தினங்கள் அனுட்டிக்கப்படும் தனிச்சிறப்புடைய விரதமாகும்.
ஏனைய விரதங்களில் பெரும்பாலானவை ஒரு தெய்வத்தின் அருள் வேண்டி நோற்கப்படுன்றது. ஆனால் நவராத்திரி முத் தெய்வங்களின் அருளை வேண்டி முக்கியமாக வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி நோற்கப்படும் கூட்டு விரதமாகும்.
நவராத்திரி காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும் முப்பெரும் தேவியர்களுக்கு விசேட அபிஷேகம், பூஜை என்பன நடாத்தப்படும்.
நவராத்திரி காலங்களில், ஸ்ரீதுர்கைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமை ராகுகாலவேளையிலும் நவராத்திரியிலும் ஸ்ரீதுர்கைக்கு புடவை சார்த்தி வணங்கினால், வாழ்வில் எல்லா துக்கங்களும் விலகும். சிறுமியரை அம்பிகையாக பாவித்து வழிபடுவது வழக்கமாகும்.
வீடுகளில் கொலு வைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக்கொலு அலங்கரிக்கப்படுகிறது. 5, 7 அல்லது 9 என்ற ஒற்றைப்படையாகப் படிகளின் எண்ணிக்கையை வைத்து கொலு அமைக்கப்படுகிறது. அருகிலேயே கும்பம் வைத்து சுவாமிப்படங்களையும் மாட்டி அணையா விளக்குகள் ஏற்றி ஒன்பது நாட்களும் விதவிதமான பட்சணங்களை நைவேந்தியம் செய்து பூஜிப்பது வழக்கத்தில் உள்ளது.
நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஓம் பொன்னே போற்றி!
ஓம் மெய்ப்பொருளே போற்றி!
ஓம் போகமே போற்றி!
ஓம் ஞானச் சுடரே போற்றி!
ஓம் பேரின்பக் கடலே போன்றி!
ஓம் குமாரியே போற்றி!
ஓம் குற்றங்களைவாய் போற்றி!
ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!
ஓம் பேரருட்கடலே போற்றி!
ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!
ஓம் அருட்கடலே போற்றி!
ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!
ஓம் இருளகற்றுவாய் போற்றி
ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!
ஓம் ஈயும் தயாபரி போற்றி!
ஓம் மங்கள நாயகியே போற்றி.
ஓம் சக்தி
No comments:
Post a Comment