Thursday, May 23, 2019

திருமணம் சீக்கிரம் நடைபெற இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள் போதும்!

அறம் எனப்படும் தர்மம் செய்யவும், சிறந்த எதிர்கால சந்ததிகளை உருவாக்கவும் பருவமெய்திய ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் திருமணம் எனும் புனிதமான சடங்கை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினர்! தற்காலத்தில் எந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஜாதகத்தில் கிரக தோஷங்கள் மற்றும் இன்ன பிற காரணங்களாலும் திருமணம் என்பது மிகவும் தாமதமாக நடைபெறுவது மிகவும் சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. ஒரு சிலருக்கு திருமணம் நடைபெறாத நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி இனிமையான இல்லற வாழ்க்கையை மேற்கொள்ள உதவும் ஒரு பரிகார முறையை தெரிந்துகொள்ளலாம். நவகிரகங்களில் செவ்வாய் மற்றும் ராகு – கேது கிரகங்கள் ஒருவரின் திருமண வாழ்க்கையில் கணவன் – மனைவி ஒற்றுமை, குழந்தை பிறப்பு போன்றவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்த கிரகங்களாக இருக்கிறது. மேற்கூறிய கிரகங்களின் தோஷங்கள் ஒரு ஜாதகருக்கு இருந்தாலும், பாதகமான கிரகங்களின் தசா புத்தி நடைபெற்றாலும் ஜாதகருக்கு திருமண வாழ்க்கை ஏற்படுவதில் தடை, தாமதங்கள் ஏற்படும் நிலை இருக்கிறது. எத்தகைய தோஷங்களும் நீங்கி சீக்கிரம் திருமணம் நடக்க இறைவழிபாடு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. இங்கு அப்படியான ஒரு எளிய இறைவழிபாடு பரிகாரத்தை தெரிந்து கொள்ளலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் அருகிலுள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் துர்க்கை அம்மனுக்கு கல்யாண அர்ச்சனை செய்ய சொல்லி துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். வழிபாடு முடிந்ததும் 5 மஞ்சள், 5 வெற்றிலை பாக்கு ஆகியவற்றை சேர்த்து அக்கோயிலிலேயே இருக்கும் சுமங்கலிப் பெண்களுக்கு ராகு காலத்தில் தானமாகக் கொடுத்து, அக்கோயிலை சுற்றிவந்து அம்பாளிடம் சீக்கிரம் தங்களுக்கு திருமணம் ஆக வேண்டும் என மனமுருகி வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை உங்களின் திருமணம் நடக்கும் காலம் வரை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செய்து வரவேண்டும். திட சித்தத்தோடு மேற்கூறிய எளிய பரிகாரத்தை செய்து வருவதால் உங்களின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி, கூடிய விரைவில் திருமண வாழ்க்கை ஏற்பட துர்க்கை அம்மன் அருள் புரிவார்!!!