Saturday, October 19, 2019

வலம்புரி சங்கின் மகிமைகள்


ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். வீட்டில், பில்லி, சூனியம், ஏவல்கள் நெருங்காது.

* ஒரு வீட்டில் வலம்புரி சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் குபேரன் அருள் இருக்கும். மேலும் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தர வாசம் செய்வாள்.

* வலம்புரிச் சங்கில் தீர்த்தம் இட்டு, துளசி இலையைப் போட்டு பூஜித்து பின்னர், அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதையே தர்ம சாஸ்திரம், ‘சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்’ என்று விளக்குகிறது.


* வலம்புரி சங்கில் வைத்த தீர்த்தத்தைக் கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும்.

* கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில், நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.

* நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, ‘பேதாண்டப் பெதுவி’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.

* வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை வலம்புரிச் சங்கில் இட்டு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.

* செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி, திருமணம் நடைபெறும்.

* பவுர்ணமி தோறும் வலம்புரிச் சங்குக்கு, குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்து வர கடன் பிரச்சினைகள் தீரும். வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றி வழிபட்டாலும் கடன் பிரச்சினை அகலும்.

* சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு கொண்டு பூஜிக்கப்படும் வீட்டில், பில்லி, சூனியம், ஏவல்கள் நெருங்காது.

* நாம் வழிபடும் தெய்வத்திற்கு வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்வதால், 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம்.

* பிறந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், வலம்புரிச் சங்கில் நீர் ஊற்றி, அதில் ருத்ராட்சம் இட்டு, அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட காய்ச்சல் நீங்கும்.

* பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு, அதில் வலம்புரிச் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவு பஞ்சம் ஏற்படாது.

வலம்புரி சங்கு !
திருவிதாங்கூர் கொடியில் உள்ள வலம்புரிச் சங்கு

செயற்கை வலம்புரி டிரைட்டன் சங்கு வகைச் சங்கு. வலம்புரிச் சங்கு அரிதானது என்பதால் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. சந்தையில் இவை போலிச் சங்குகள் என அடையாளப்படுத்தப்படுகின்றன.
வலம்புரிச் சங்கு (Dakshinavarti Shankh) என்பது சங்குகளில் ஒரு அரிய வகை ஆகும். இது இந்து நம்பிக்கைகளில் மிகப் புனிதமான சங்காகவும், வளத்தையும், நலத்தையும் தருவதாக கருதப்படுகிறது. இந்த நம்பிக்கைகளின் காரணமாக வலம்புரிச் சங்குகளைப் பெருந்தொகை அளித்து வாங்குபவர் உள்ளனர். இச்சங்கு திருவிதாங்கூர் கொடி, கேரள அரசு சின்னம், சிக்கிம் அரசு சின்னம் போன்றவற்றில் இடம்பெற்றுள்ளது.

நம்பிக்கைகள் !

வலம்புரிச் சங்குகள் கடற்கரைக்கு வந்து முத்துகளைக் கொட்டிவிட்டுச் செல்லும் என்றும், வலம்புரிச் சங்கு தானே முழங்கும் என்றும் நம்பிக்கை நிலவிவந்தது. வலம்புரிச் சங்கிலிருந்து விலையுயர்ந்த முத்து கிடைக்கும் என்ற நம்பிக்கை சங்க காலத்திலிருந்தே உள்ளது. சிலப்பதிகாரத்தில் வலம்புரியீன்ற நலம்புரி முத்தம் (27-244), மாசறு பொன்னே வலம்புரி முத்தே ( 2:73), வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும், வலம்புரியொரு முத்தன்ன (பெருந்தொகை 1712:25-27) வலம்புரி முத்து என்னும் கருதுகோள் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இடம்பெற்றுள்ளன.

தோன்றும் விதம்!

இடம்புரி, வலம்புரிச் சங்குகளானது வெண் சங்கு என்னும் ஒரே இனத்தைச் சார்ந்தவை. சங்குகள் கருமுட்டையாக வளரத் தொடங்கும்போது செல் பிளவுறும் கோணம் நேர் குறுக்காக அமையாமல் சற்று சாய்வாக அமைகிறது. அடுத்த பிளவுகள் முந்தைய பிளவின் சாய்கோணத்தில் அமைவதால் பிளவு நிலைகள் ஆரச்சுற்றில் நிகழ்கின்றன. புரிச்சுற்றின் அடிப்படையில் இதன் உடல் அமைவதால் அதை அடியொற்றி மேல்தோடும் அமைந்துவிடுகிறது. கருசெல் பிளவின் சாய்கோணம் இடது, வலது என விலகுவதற்கு இதன் மரபணுக்களே காரணம். இடம்புரி செல்பிளவு இயல்பானது. மரபணுவின் சடுதிமாற்றம் காரணமாகவே வலம்புரிச் சங்கு உருவாகிறது. மரபணு சடுதிமாற்றம் வெகு அரிதாக நிகழ்வது என்பதால் வலம்புரிச் சங்கும் அரிதாகவே கிடைக்கிறது.

வகைகள் !

வலம்புரி சங்கு உயர்வானது என்றாலும் அதைவிட உயர்வான சங்கு சலஞ்சலம்; சலஞ்சலத்திலும் உயர்வான சங்கு பாஞ்சசன்யம் என்று மக்கள் கருதினர். ஆயிரம் இடம்புரிச் சங்குக்கு இணையானது ஒரு வலம்புரி; ஆயிரம் வலம்புரிக்கு ஒரு சலஞ்சலம்; ஆயிரம் சலஞ்சலத்துக்கு நேரானது ஒரு பாஞ்சசன்யம் என்ற கருத்துக்கள் நிகண்டுகளில் கூறப்பட்டுள்ளன] சலஞ்சலத்தின் உள்ளே வெள்ளி நிறத்தில் இருக்கும் மூன்று கோடுகள் மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்று சில சம்ஸ்கிருத நூல்கள் சொல்கின்றன. என்றாலும் இன்றுவரை சலஞ்சலம், பாஞ்சசன்யம் என்பதாக விவரிக்கப்படும் சங்குகளை எவரும் கண்டதில்லை!

வலம்புரிச் சங்குகள் மேலான சக்தியைக் கொண்டவை என்பதற்கு சான்று எதுவுமில்லை வலம்புரிச் சங்குகள் இடம்புரிச் சங்கு போலன்றி மிக அரிதாகக் கிடைப்பவை என்பது மட்டும் உண்மை.