Friday, April 19, 2019

சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல்8



மாதம் தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை மட்டும் #சித்ராபவுர்ணமி என்று சிறப்புப் பெயரிட்டு நாம் அழைப்பது வழக்கம்.

அன்றைய தினம் நாம், ‘மலையளவு செய்த பாவத்தை கடுகளாவாகக் குறைத்து எழுது என்றும், கடுகு அளவாகச் செய்த புண்ணியத்தை மலையளவாக உயர்த்தி எழுது’ என்றும் #சித்ரகுப்தனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் இனிமேல் நான் செய்யும் செயல்கள் புண்ணியம் தருவதாக அமைய நீ வழிகாட்டு. வாழ்க்கைப் பாதையை சீராகவும், நேராகவும், ஆக்கிக் கொடு. ஆயுள் வளரவும், ஆற்றல் பெருகவும், செல்வம் பெருகவும் வாசலைத் திறந்து வழியைக் காட்டு என்று வேண்டிக் கொண்டால் நமது வாழ்க்கைப் பயணம் சிறப்பாக அமையும்.

பூஜையறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து அருகில் வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து ‘சித்திரகுப்தன் படியளப்பு’ என்றும் அதில் எழுதி வைப்பர்.. சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கல், பச்சரிசிக் கொழுக்கட்டை, இனிப்புப் பலகாரங்கள் போன்றவற்றை இலையில் பரப்பி வைத்து, பழங்களில் பலாச்சுளை, திராட்சை, மாம்பழம், முழு நுங்கு போன்றவற்றையும் வைத்துப் படைக்க வேண்டும்.

அன்றைய தினம் வைக்கும் குழம்பில் கூட தட்டைப் பயிறும், மாங்காயும் சேர்த்து வைப்பது நல்லது. ஜவ்வரிசி பாயசம், அப்பளம் வைத்து, இளநீர், பானகம், மற்றும் நீர்மோர் போன்றவைகளையும் அருகில் வைத்து முத்தாய்ப்பாக நடுவில் கரகம் வைக்க வேண்டும்.

நமது வாழ்வில் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க பொங்கல் வைக்கின்றோம். கனிவாக வாழ்வமைய கனி வர்க்கங் களைப் படைக்கின்றோம். நவதான்யம் மற்றும் அனைத்துச் செல்வத்திற்கும் அதிபதியான குபேரனுக்கு இணையானவர் என்பதாலும் தட்டைப் பயறு வைக்கின்றோம். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற மாவிலை, கிரகங்கள் சாதகமாக விளங்க கரகம் வைத்து வழிபடுகின்றோம்.

பூமா தேவியால் பயிர் விளைவதால் தினமும் உணவு கிடைக்கவே வெண்கலக் கிண்ணத்தில் மண்ணும் தண்ணீரும் வைத்து அதன்மேல் தண்ணீர் நிரம்பிய செம்பின்மீது மாவிலைக் கொத்தும், மாங்காயும் வைப்பது வழக்கம். மற்ற கும்பங்களில் தேங்காய் வைப்பது வழக்கம். ஆனால் சித்ரகுப்தன் வழிபாட்டில் மாங்காய் வைப்பது தான் வழக்கம். அதன் அருகில் கோலமிட்டுக் குத்துவிளக்கேற்ற வேண்டும். பொங்கல் பொங்கி வரும்பொழுது சங்கு ஊதுவது அவசியமாகும்.

பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் விரதத்தைத் தொடங்க வேண்டிய நாள் சித்ரா பவுர்ணமி தான். விரதத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் இரவு நிலாப் பார்த்து வழிபட்ட பிறகு தான் உணவு அருந்த வேண்டும். நமது பாவ புண்ணியத்தையும் பதிந்து வைத்து அடுத்த பிறவிக்கு அனுகூலம் தரும் சித்ர குப்தனை வழிபட்டால் செல்வநிலை உயரும். தேவையானவைகள் தேவையான நேரத்தில் நடக்கும்.

இந்தச் சித்ரகுப்தனுக்கு காஞ்சீபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அருப்புக்கோட்டை அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலிலும் தனிச்சன்னிதி சித்ர குப்தனுக்கு உள்ளது