Sunday, December 22, 2019

சூரிய காயத்ரி மந்திரம் மற்றும் பலன்கள்


இந்த உலகத்தில் உள்ள ஜீவ ராசிகள் அனைத்திற்கும் வெளிச்சம் தந்து வாழ வைப்பது சூரியன் தான். அவரே நவகிரங்கங்களுள் ஆண்மை கிரகமாகும். ஆண்மைக்குண்டான ஆற்றலை வழங்குபவர் இவரே. ஜாதக குறைபாடுகளால் சில தம்பதியருக்கு குழந்தை பேரு தள்ளிப்போகும். இதற்கு ஜாதக ரீதியில் பல காரணங்கள் உள்ளது. ஆண் பெண் என குறை யாரிடம் இருந்தாலும் இறைவனிடம் இருவரும் வேண்டுவதே சரி. அந்த வகையில் ஆண்கள் சூரியனை வணங்குவதன் மூலம் சூரியனால் ஏற்படும் பிரச்சனைகள் விலகும், குழந்தை பேரு உண்டாகும். சூரியனை வழிபடும் சமயத்தில் கூறவேண்டிய அற்புதமான சூரியன் காயத்ரி மந்திரம் இதோ. சூரியன் காயத்ரி மந்திரம்: ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாஸ அஸ்தாய தீமஹி தன்னோ சூர்ய ப்ரசோதயாத்
பொது பொருள்: குதிரை கொடியை உடையவரும், தன் பாச கரங்களால் உலக மக்களை ரட்சிப்பவருமான சூரிய பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நல்லாசி தந்து அருள்புரிய உங்கள் பாதம் பணிகிறேன். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக ஆண்களின் நிலை உயரும், புத்திர பாக்கியம் உண்டாகும், நிர்வாக திறன் அதிகரிக்கும், தயாளமான குணம் உண்டாகும், அனைவரிடத்திலும் பாகுபாடின்றி பழகும் நர்குணம் பிறக்கும். சூரிய பரிகாரங்கள்: சூரியபகவானின் தோஷங்கள் நீங்கவும், அவரின் முழுமையான அருளாசிகளைப் பெறவும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குள்ளாக தஞ்சையில் இருக்கும் சூரியனார் கோவிலுக்கு சென்று, சூரிய பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, ஆரஞ்சு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்து, கோயிலை 10 முறை வலம் வந்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது சூரிய பகவானால் நன்மைகள் ஏற்பட வழிவகை செய்யும். சூரியனார் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள், உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணிக்குள்ளாக சென்று, நவக்கிரக சன்னிதியில் இருக்கின்ற சூரியபகவானுக்கு செந்தாமரைப்பூ சமர்ப்பித்து, கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவை நைவேத்தியம் செய்து, சூரிய பகவானுக்குரிய காயத்திரி மந்திரம் மற்றும் ஸ்தோத்திரங்களை 108 முறை துதித்து வழிபடுவதால், சூரிய கிரக தோஷங்கள் நீங்கி, வாழ்வில் நன்மையான பலன்கள் உண்டாகும். இந்த பரிகாரத்தை 9 முதல் 27 வாரங்கள் வரை செய்வதால் மட்டுமே உறுதியான பலன்களை பெற முடியும். மேற்கூறிய இரண்டு பரிகாரத்தையும் செய்ய முடியாதவர்கள் தினந்தோறும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசை நோக்கி நின்றவாறு ஓம் சூரிய நாராயண நமஹ என்கிற மந்திரத்தை 108 துதித்து வழிபடுவதால் சூர்ய கிரக தோஷங்கள் நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் ஒரு வேளை மட்டும் இனிப்பு உணவு அல்லது கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு, சூரிய பகவானுக்கு விரதம் இருந்து, சூரிய பகவானை மந்திரங்களால் துதித்து வழிபட்டு வர சூரியனால் நன்மைகள் உண்டாகும். மேலும் உங்கள் சக்திக்கேற்ப ஞாயிற்றுக்கிழமைகளில் 8 மணிக்குள்ளாக ஏழைகளுக்கு கோதுமை, வெல்லம், இளஞ்சிவப்பு நிற வஸ்திரங்கள் போன்றவற்றை தானம் செய்வதும் சூரிய பகவானுடன் தோஷங்களை போக்கும் சிறந்த பரிகாரமாகும்.