Saturday, June 22, 2019

சின்ன வயசில

😡

சின்ன வயசில சகோதரங்களோட போட்ட சண்டையை இப்ப நினைச்சாலும் ஒரு இனம்புரியாத "சந்தோசம்" வரும்.

சாமியாரின் வீட்டில் நாலும் "கடுவன்".அதாவது நாலும் பொடியள்.
சாமியார் மூண்டாவது.

பெரியண்ணருக்கும் சாமியாருக்கும் இடையில் சண்டை வருவதில்லை.
ரண்டு பேரும் வலு ஒட்டு!
சாமியார் ஒரு நாளும் பெரியண்ணரிடம் இருந்து அடி வாங்கியதேயில்லை.

ஒரு காலப்பகுதியில் சாமியாருக்கும் சின்னண்ணருக்கும் இடையில் தான் பயங்கர மோதல் நிகழ்ந்தது.

சின்னண்ணர் கொஞ்சம் அமசடக்கு.
கனக்க கதையான். ஆனால் கோபம் வந்தால் கிடக்கிறதால விளாசுவான்.
பதிலுக்கு சாமியாரும் சும்மா லேசுப்பட்ட ஆளில்லை.

உப்பிடித்தான் சாமியாருக்கும் சின்னண்ணருக்கும் இடையில் ஒரு சண்டை. சண்டைக்கு காரணம் "ரேடியோ".
ஆர் ரேடியோ கேக்கிறது எண்ட பிரச்சினை.
அதிலும் ஆற்ற தலைமாட்டில ரேடியோ வைக்கிறது எண்ட பிரச்சினை.
"ஒலிச்சித்திரம்" எண்டு முந்தின காலம் படக்கதையை சுருக்கி ஒரு மணித்தியாலம் போடுவாங்கள்.
அண்டைக்கு கமலகாசனின் "அபூர்வ சகோதரர்கள்" படக்கதை போனது.

சாமியார் ரேடியோவை கொஞ்சம் தன்ர பக்கம் இழுக்க...சின்னண்ணர் தன்ர பக்கம் இழுக்கவும் ஆரம்பிச்சது சண்டை!

பேச்சுவார்த்தையில் போன பிரச்சினை திடீரெண்டு வன்முறையில் வெடித்தது!

அம்மா இடையில பூந்து மத்தியஸ்தம் செய்தாலும் சாமியார் கேக்கவில்லை.

வந்த கோபத்துக்கு சாமியார் ரேடியோவை தூக்கி ஒரே அடி!!!

ரேடியோ துண்டு துண்டாய் சிதறியது.
சின்னண்ணர் இதை எதிர்பார்க்கவில்லை.
கணப்பொழுதில் சுதாகரித்து ;
விட்டான் ஒரு விளாசல்!!
சாமியாரின் கன்னம் சிவக்க...!!!

சாமியார் அம்மாவை விலத்தி சின்னண்ணரில் புலியாய்ப்பாய்ந்து விசர்நாயாய் கடித்தார்.

பதிலுக்கு சின்னண்ணர் சாமியாரின் தலை மயிரைப்பிடிச்சு மடக்கி முதுகில் முறையாய் நாலு விட்டதில் சாமியார் சுருண்டு விழுந்தார்.

இதுக்கு மேல் சாமியாரால் ஏலாது எண்டு உணர்ந்த அவர் தரையில் மயங்கி விழுந்து "நடித்தார்"!

சாமியாருக்கு "நடிப்பு" கைவந்த கலை!!!

அம்மா பயந்து ஓடி வந்து எழுப்பி தடவி அழுதார். சின்னண்ணர் திகைச்சுப்போனார். சாமியார் விக்கி விக்கி மூச்சு விடக்கஸ்ரப்பட்ட மாதிரி நடிக்கத்தொடங்கினார்.

இவ்வளவத்தையும் பாத்து தம்பி திகைச்சுப்போய் நிண்டான்.

நல்ல காலத்துக்கு பெரியண்ணரும் இல்லை அப்பரும் இல்லை!

இருந்திருந்தால் அண்டைக்கு மரண கலகம் நடந்து சாமியார் குழறக்குழற வாங்கியிருப்பார்.

கொஞ்சக்காலம் உப்பிடி சின்ன சின்ன பிரச்சினைக்கும் பாம்பும் கீரியுமாய் சின்னண்ணரும் சாமியாரும் கொழுவுப்பட்டு குத்துப்பட்டு திரிஞ்சினம்.

பிறகு சின்னண்ணர் வளர....
சாமியாரின் கவனம் தம்பியின் பக்கம் திரும்பியது.

உப்பிடித்தான் ஒருக்கால் சாமியாரும் தம்பியும் "ஆமியும் இயக்கமும்" விளையாட்டு விளையாடினார்கள்.

ஆர் ஆமி? ஆர் இயக்கம் ? எண்ட பிரச்சினையில் சாமியார் முதல்ல இயக்கமாய் இருக்க முடிவெடுத்தார்.

சாமியார் தனது பங்கரை மாமரத்துக்கு கீழேயும் தம்பி தனது பங்கரை பிலா மரத்துக்கு கீழேயும் அமைத்தார்கள்.

பங்கர் எண்டால் ஒரு காவோலையை எடுத்து மறைப்புக்கு வைச்சுபோட்டு...
எறியிறதுக்கு கொக்காரை மற்றும் ஊமக்காய்ச்சி பொறுக்கி வைச்சால் சரி.

சண்டை ஆரம்பமாகியது!

முதலில் கொக்காரையால் எறிஞ்சு கொண்டு இடைக்கிடை ஊமக்காய்ச்சியால் எறிஞ்சம்.

ஊமக்காய்ச்சி முறையாப்பட்டால் மண்டை பிளக்கும்.

சாமியார் மாமரத்துக்கு பின்னால் நிலையெடுத்து தற்காப்பு யுத்தம் நடத்தினார்.

சாமியாரின் தம்பி முன்னேறி வந்து தாக்கினான்.

வெற்றிலைக்கேணியில ஆமிய கடலால இறங்கி வர விட்டு அடிச்ச கதைகளை நன்கு அறிவார் சாமியார்.

அதனால் ஆமியை (தம்பியை)!கிட்ட வரவிட்டார்.

முறையா இரண்டு ஊமக்காய்ச்சியால சாமியார் குறி வைச்சு எறிஞ்சார்.

திரும்பி ஓடிய தம்பியின் முதுகில் பட்டு அவன் குழறினான்.

அட பாவம் தம்பி குழறுறான் எண்டு சாமியார் கிட்ட ஓடிப்போனார்.

அறுவான்!!!
சடாரெண்டு கையில கிடந்த கல்லாலை சாமியாருக்கு எறிஞ்சான்.
சாமியாரின் கையில் விழுப்புண்!

"பொறுடா வாறன்" எண்டு தளத்துக்கு திரும்பிய சாமியார்;
தேவைப்படலாம் எண்டு பொறுக்கி வைச்ச சல்லிக்கல்லோண்டை எடுத்துக்கொண்டு தாக்குதலுக்கு தயாரானார்.

அடிபட்ட புலியாக சாமியார் கடுமையாக தாக்குவார் எண்டு அறிஞ்ச தம்பி பின்வாங்கி ஓட வெளிக்கிட்டார்.

ஆனையிறவில அடிவாங்கின ஆமி பலாலிக்கு ஓடின மாதிரி பக்கத்துவீட்டு ஆச்சி வீட்ட ஓட வெளிக்கிட்டார் தம்பியர்.

கணக்கா "கொட்டுக்கடப்பால" காலைத்தூக்கி வைக்க ...
சாமியார் குறிப்பார்த்து எறிஞ்ச கல் தம்பியரின் தலையை பதம் பார்த்தது.
"கொட்டுக்கடப்பில்" சுருண்டு விழுந்தான் தம்பி!

அவன் "ஐயோ" எண்டு கதறியபடி கண்ணைப்பொத்திக்கொண்டு விழுந்தான்.

சாமியார் நிலமையை உணர்ந்து ஓடிப்போய் தூக்கினார்.

முகம் முழுக்க ரத்தம் கொழ கொழவெண்டு ஓடியது.

ஒரு மாதிரி தம்பியை தூக்கி வந்து கிணத்தடியில் இருத்திப்போட்டு தண்ணியை அள்ளி நாலைஞ்சு வாளி அவன் தலையில் ஊற்றினார்.

தம்பி அரை மயக்கத்தில் முனகினான்.

துவாயை எடுத்து துடைச்சுப்பாத்தால்...
நெத்தியில் ரண்டு மூண்டு "இளைப்போடும்" அளவுக்கு வெடிச்சுப்போய் ஆவெண்டு பிளந்து போய் இருந்தது.

அது பறுவாயில்லை... அவன் கண்ணை திறக்கமாட்டாமல் வேதனையால் துடித்தான்.

கண்ணில பட்டு கண்தெரியாமல் போனால் என்ன ஆகும். சாமியாருக்கு அழுகை வந்தது.
சாமியார் அழுதேவிட்டார்.

கடைசியாய் தம்பி கண்ணைத்திறந்தபோதுதான் சாமியாரின் போன உசிர் திரும்பி வந்தது.

வெளியில போன அம்மா வந்து என்னடா நடந்தது எண்டு கேட்டபோது...
"படியால தடுக்கி விழுந்துவிட்டான்" எண்டு சாமியார் கூசாமல் பொய் சொன்னார்.
(அம்மா வாறதுக்கிடையில் சாமியார் சண்டை பிடிச்சதுக்கான அத்தனை தடையங்களையும் அழிச்சுவிட்டார்)
சாமியார் பொய் சொன்னால் பிடிக்கவே ஏலாது. அந்தளவு வலு விண்ணர்.

கடைசியாய் தம்பியின் நெத்தியில் மூண்டு இழை தையல் போடப்பட்டது.
அந்த அடையாளம் இப்பவும் இருக்கவேணும்.

முப்பது வருசமா "தம்பி படியால தடக்கி விழுந்ததாயே" அம்மா நினைச்சுக்கொண்டு இருக்கிறா!

அதுக்குப்பிறகு "பெரிய சண்டை" நடக்காவிட்டாலும் சின்ன சின்ன சண்டைகள் நடக்கும்.
-குளிக்கும் போது கிணத்தடியில சண்டை
-படுக்கும் போது பாய்க்குச்சண்டை
-தும்பி பிடிக்கிற சண்டை
-சைக்கிளுக்கு சண்டை
-பூரானுக்கு சண்டை
-பேனைக்கு சண்டை
-இறைச்சிக்கறியில ஈரலுக்கு சண்டை
-பட்டத்துக்கு சண்டை
-லக்ஸ்பிறே மாவுக்கு சண்டை
-பங்கருக்குள்ள சண்டை

சாமியார் வளர்ந்து ஒரு 17வயது இருக்கும். ஒருக்கால் சாமியாரின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை.
சாமியார் லாம்பு வெளிச்சத்தில் விறாந்தையில் குனிஞ்சு படிச்சுக்கொண்டு இருந்தார்.
சாமியாரின் அம்மா வாயைத்திறந்தால் மூடமாட்டா!!
சாமியாரின் அப்பாவும் லேசுப்பட்ட ஆளில்லை.
சண்டை ஓயாமல் வர வர கூடிக்கொண்டே போனது!

ஒரு கட்டத்தில் சாமியார் ...
"பேசாமல் ரண்டு பேரும் இருக்கிறியளா?" எண்டு கோபமாய் கத்த;
சாமியாரின் அம்மா அடங்கினா.
சரி அடங்கிட்டா எண்டு பாக்க திரும்பவும் "பழஞ்சீலை கிழிஞ்ச" கணக்காய் புறுபுறுக்க...
பதிலுக்கு அப்பா கத்த ...
மீண்டும் சண்டை !!!

சாமியாருக்கு வந்த ஆத்திரத்தில் மண்ணெண்ணய் லாம்பை தூக்கி சுவத்தில ஒரே அடி!!!

சிமிலி சுக்குநூறாய் வெடிச்சு மண்ணெண்ணய் சிதறி சுவரில் ஒருக்கால் நெருப்பு விளாசி எரிஞ்சு அணைஞ்சது.

சாமியார் இப்படிச்செய்வார் எண்டு அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அதுக்குப்பிறகு சாமியாரின் முன்னால் அவர்கள் "சண்டை" போட்டதாய் நினைவில்லை.

உந்த உசாரில சாமியார் ஒருநாள் தன்ர மனிசியோடு சண்டைபிடிக்கும் போது...
"கனக்க கதைச்சியெண்டா உன்ர போன் உடையும்" எண்டார்.

கடைசியில் சண்டையில் போன் உடைஞ்சது...!!!

ஆற்றை எண்டு கேளுங்கோவன்😛
வேறை ஆற்றை???
சாமியாரின் phone தான்!!!

சண்டை போடுறது முக்கியமில்லை.
எதிராளி ஆர் எண்டு அறிஞ்சு கைவைக்கவேணும் எண்ட விசயம் அப்பதான் சாமியாருக்கு விளங்கியது.

#சனிக்கிழமைசாமியார்