Sunday, July 14, 2019

சுக்கிரன் இயற்கையிலேயே ஒரு சுபக் கிரகமாக இருந்தாலும்,

சுக்கிரன் இயற்கையிலேயே ஒரு சுபக் கிரகமாக இருந்தாலும்,எல்லோருக்கும் யோகங்களை அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை. ரிஷபம்,துலாத்தில் ஆட்சி பெறும் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெறுகிறார். ஆனால், கன்னியில் நீச்சம் பெற்றுக் காணப்படுகிறார். ஒருவருடைய வாழ்க்கையில் சுக்ர தசை வந்தால், அது 20 வருடங்கள் நடைபெறும். ஆனால், எல்லோருக்கும் சுக்ர தசை யோகமாகத்தான் இருக்கும் என்று கூற முடியாது. உதாரணமாக தனுசு, மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பாவியாகிறார். இந்த லக்கினக்காரர்களுக்கு நல்ல பலன்களோ யோகமான அமைப்போ உண்டாவதில்லை. ஆனால் கன்னி லக்கினத்திற்கு தனபாக்கியாதிபதியான சுக்கிரன் யோகங்களை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார். மிதுனம், கும்பம், மகரம் இவர்களுக்கெல்லாம், நல்ல பலன்களைக் கொடுத்து அபரிமிதமான ராஜயோகத்தைக் கொடுக்கிறார். சுக்கிரன் உச்சம் பெற்று சுக்கிர தசை நடைபெறும் ஒருவருக்கு சொகுசு வாழ்க்கை அமைந்து.

செல்வமும், செல்வாக்கும் கூடும். ஒரு கிரகம் உச்சமாகி அந்தக் கிரத்தோடு, சுக்கிர தசை நடைபெறுகிற போது, தொழில் ஏற்றம் அடையும். சுக்கிரன் நீச்சமாகி அதனுடைய திசை நடைபெறுகின்றபோது, பெண்களால் கெடுதி, தொழிலில் போராட்டம், சில ரகசிய நோய்கள் உண்டாகும். நீச்சம் பெற்ற கிரகத்தோடு சேர்க்கை பெற்ற சுக்கிரன் பழிச் சொல்லுக்கும், இழி சொல்லுக்கும் ஆளாகக்கூடிய நிலைகள், சொல்ல முடியாத துன்பங்கள் அபவிக்கின்ற யோகம் யாவும் உண்டாகும். நட்பு பெற்ற சுக்கிர தசை உண்டாகிறபோது நல்ல பலன்களாக நிகழும். அபரிமிதமான ராஜ யோகம், சொந்த வீடு, வாகனம்,வெளிநாடு செல்லக்கூடிய யோகம் யாவும் உண்டாகும். ஒருவருடைய ஜாதகத்தில் திரிகோணம் என்று சொல்லக்கூடிய 1,5,9 ஆகிய இடங்களில், சுக்கிரன் வீற்றிருந்து சுக்கிர தசை நடைபெறுகின்றபோது, பிரமாதமான ராஜயோகம் உண்டாகிறது. புகழ், வீடு வாங்கும் யோகம்,வாகனப் பிராப்தி அனைத்தும் உண்டாகும். தசை நடைபெறுகின்றபோது, அழகான மனைவி, அற்புதமான புத்திர பாக்கியம், சொகுசு வாழ்வு அத்தனையும் உண்டாகும். ஒருவருடைய ஜாதகத்தில், சுக்கிரன் 4,7,10 ஆகிய இடங்களில் இருந்தால், அவருடைய திசை நடைபெறும்போது வாகன யோகம் ஆபரணச் சேர்க்கை செல்வம், செல்வாக்கு, வாகனம், வீடு அனைத்தும் அமையும். மகிழ்ச்சி தாண்டவமாடும். மாறாக, ஒருவருடைய ஜாதகத்தில், சுக்கிரன் பகை பெற்ற திசை நடைபெற்றால், நெருங்கிய உறவினர்களோடு விரோதம், மனைவியுடன் கருத்து வேறுபாடு, பொருளாதர வீழ்ச்சி, குடும்பத்தில் குழப்பம் ஆகியவை ஏற்படும். சுக்கிரன் பாவர்களால் பார்க்கப் பெற்று தசை நடை பெற்றால், கெடுபலன்கள் தொடரும். குடும்பத்தில் குழப்பம், பொருள் இழப்பு, ஊரையும் நாட்டையும் பிரியும் நிலை முதலியவை ஏற்படும். சுக்கிர தசை நடைபெறும் காலங்களில் வெள்ளிக்கிழமைதோறும், அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்வதும் பெருமாள் வழிபாடும் நற்பலனை உண்டாக்கும். வழிபாடு - பரிகாரங்கள்

சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும், சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும்.

பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நலம் பயக்கும். மாலையில் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம், சுக்கிர காயத்ரி மந்திரம் சொல்லலாம்.

ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். சுக்கிர ஷேத்திரமான கஞ்சனூர், கும்பகோணம் அருகில் உள்ளது. இங்கு சென்று, தேவியருடன் அருள் பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் எல்லா வகையான திருமண தோஷங்களும் நீங்கும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பவர்கள் ஒன்று கூடுவார்கள்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள வெள்ளீச்சரம் என்ற ஸ்தலம் சுக்கிரனுக்கு உரியது. இங்குள்ள சுக்கிரேஸ்வரர் சுக்கிரனின் அம்சமாக உள்ளார். இவரை வழிபட குடும்பத்தில் நலங்களும் வளங்களும் சேரும். தன, தான்ய விருத்தி உண்டாகும். கண்கள் சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தியாகும். பரிகார தலங்கள், விசேஷ கோயில்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் கோயிலில் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம். வருடா வருடம் வரும் வரலட்சுமி நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பூ, பழம் கொடுத்து ஆசி பெற்றால் தடைகள் நீங்கும். சுபிட்சம் மலரும். நாளை சுக்கிர பகவான் ஜெயந்தியாகும். இந்நாளில் சுக்கிர பகவானை வணங்கி வழிபட்டு அவரது அருள் கடாட்சம் பெறுவோமாக!