Wednesday, July 31, 2019

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ஏழு சிறப்புகள்!!!


திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானு ஸ்ரீரங்கம் ஆலயத்தில் 'ஏழு’ சிறப்புகள் இருக்கின்றன. அந்த ‘ஏழு’ சிறப்புகள் பற்றி இங்கே பார்க்கலாம்!!!

திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரம் கொண்ட ஆலயமாகவும் திகழ்வது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் மேலும் பல பெருமைகளும் இருக்கின்றன. திருமாலின் அவதாரங்களில் சிறந்ததாக கருதப்படும் ஸ்ரீராமபிரான் பூஜித்த பெருமை கொண்டது, இந்த ஸ்ரீரங்கம்.

ராமாவதாரம், திருமாலின் 7-வது அவதாரம் என்பது சிறப்பு! ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில், ஏழு பிரகாரங்கள், ஏழு திருமதில்கள் கொண்டது ஸ்ரீரங்கம் ஆலயம். அதேபோல் தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தின் 30 நாட்கள் மட்டும், யானை மீது வைத்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்படும்!!

நம்பெருமாள் கோவிலில் ஏழு ஆச்சாரியார்களுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது!.

ராமானுஜர்
பிள்ளை லோகாச்சாரியார்
திருக்கச்சி நம்பி
கூரத்தாழ்வான்
வேதாந்த தேசிகர்
நாதமுனி
பெரியவாச்சான் பிள்ளை

பெரியது!

பெரிய கோவில்
பெரிய பெருமாள்
பெரிய பிராட்டியார்
பெரிய கருடன்
பெரியவசரம் (மதிய நைவேத்தியம்)
பெரிய திருமதில்
பெரிய கோபுரம்

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் உள்ள தாயார் சன்னிதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்!

கோடை உற்சவம்
வசந்த உற்சவம்
ஜேஷ்டாபிஷேகம்
நவராத்திரி
ஊஞ்சல் உற்சவம்
அத்யயன உற்சவம்
பங்குனி உத்திரம்.

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை மட்டும், தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். அந்த விழாக்கள்!

விருப்பன் திருநாள்
வசந்த உற்சவம்
விஜயதசமி
வேடுபறி
பூபதி திருநாள்
பாரிவேட்டை
ஆதி பிரம்மோற்சவம்

சந்திர புஷ்கரணியில் ஆறு முறை, கொள்ளிடத்தில் ஒருமுறை என மொத்தம் ஏழு முறை, ஸ்ரீரங்கப் பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்!

விருப்பன் திருநாள்-சித்திரை
வசந்த உற்சவம்-வைகாசி
பவித்ரோற்சவம்-ஆவணி
ஊஞ்சல் உற்சவம்- ஐப்பசி
அத்யயன உற்சவம்-மார்கழி
பூபதி திருநாள்-தை
பிரமோற்சவம்-பங்குனி

நம்பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை மட்டுமே, திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்!

சித்திரை
வைகாசி
ஆடி
புரட்டாசி
தை
மாசி
பங்குனி

நம்பெருமாள் ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்களின் போது, அங்குள்ள அனைத்து மண்டபங்களுக்கும் எழுந்தருள்வார். ஆனால் ஏழு உற்சவத்தின் போது மட்டும் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். அந்த உற்சவங்கள்:-

வசந்த உற்சவம்
சங்கராந்தி
பாரிவேட்டை
அத்யயன உற்சவம்
பவித்ர உற்சவம்
ஊஞ்சல் உற்சவம்
கோடை உற்சவம்.

ஸ்ரீரங்கத்தில் 12 ஆழ்வார்களுக்கும் சன்னிதி உள்ளது. இந்த 12 ஆழ்வார்களும், 7 தனிச் சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்!

பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார், நம்மாழ்வார்
திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்
குலசேகர ஆழ்வார்
திருப்பாணாழ்வார்
தொண்டரடிபொடி ஆழ்வார்
திருமழிசை ஆழ்வார்
பெரியாழ்வார், ஆண்டாள்

நம்பெருமாள் 7 வாகனங்களில் எழுந்தருளி மக்களுக்கு திருக் காட்சி கொடுப்பார்!

யானை- தை, மாசி, சித்திரை
கருடன்- தை, பங்குனி, சித்திரை
பல்லக்கு - தை, பங்குனி, சித்திரை
இரட்டை பிரபை - தை, மாசி, சித்திரை
சேஷம் - தை, பங்குனி, சித்திரை
அனுமன்- தை, மாசி, சித்திரை
அம்சம் - தை, மாசி, சித்திரை

ரங்கநாத பெருமாளுக்கு 7 நாச்சியார்கள் இருக்கிறார்கள்!

ஸ்ரீதேவி
பூதேவி
துலுக்க நாச்சியார்
சேரகுலவல்லி நாச்சியார்
கமலவல்லி நாச்சியார்
கோதை நாச்சியார்
ரெங்கநாச்சியார்.

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன!

நாழிகேட்டான் கோபுரம்
ஆர்யபடால் கோபுரம்
கார்த்திகை கோபுரம்
ரெங்கா ரெங்கா கோபுரம்
தெற்கு கட்டை கோபுரம்-I
தெற்கு கட்டை கோபுரம்-II
ராஜகோபுரம்.

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நம்பெரு மாளுக்கு வருடத்திற்கு ஏழு சேவைகள் நடைபெறுகின்றன!

பூச்சாண்டி சேவை
கற்பூர படியேற்ற சேவை
மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை
வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாகனம்
ராமநவமி சேர்த்தி சேவை
தாயார் திருவடி சேவை
ஜாலி சாலி அலங்காரம்.

கோகுலத்தில் ஆயர்பாடியில் இடைவிடாது ஏழுநாட்கள் பெய்த மழையிலிருந்து பசுக்களையும், மக்களையும் காக்க கோவர்த்தனகிரி என்னும் மலையை குடையாக பிடித்தார் கிருஷ்ணர்!

கோவர்த்தனகிரியோ மறுபிறவியில் ஏழுமலைகளாகி ஏழுமலையானை தாங்குகிறது!!!

ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் என் அப்பன் பெருமாளை, ஸ்ரீனிவாசனை, கோவிந்தனை, மாதவனை, மதுசூதனனை, கேசவனை, திரிவிக்ரமனை, வாமனனை ஸ்ரீதரனை, பத்மநாபனை, அனந்தனை, அச்சுதனை, வெங்கட்ட ரமணனை, விஷ்ணுவை, நாராயணனை, ஸ்ரீரெங்கனைமறவாத மனம் தா!!!