Thursday, July 11, 2019

மூச்சுப்பிடிப்பு



``மூச்சுப்பிடிப்பு என்பது சுவாசிக்கும் போது மூச்சை இயல்பாக விட முடியாத நிலைமை.

முழுமையான ஒரு சுவாசம் இருக்காது. ஆழ்ந்த உள் மூச்சு விட முடியாது. பெருமூச்சு விட்டாலும் வலிக்கும். சிரித்தால் கூட வலிக்கும். அதனால்மூச்சுப்பிடிப்பு பிரச்னை ஏற்பட்டவர்கள் அந்த நேரத்தில் மேலோட்டமாக மூச்சுவிடுவார்கள்.

நுரையீரலின் விரிந்து சுருங்கும் செயல்பாடு அவர்களுக்கு வலி ஏற்படுத்தும். மார்பு எலும்புக் கூட்டின் (விலா எலும்புகள்) நடுவில் இருக்கும் மத்திய தசைகள் Intercostal muscles இறுகும். அதனால் இந்த நிலைமை ஏற்படும்.

மூச்சுப்பிடிப்பு என்பது பல காரணங்களுக்காக ஏற்படலாம். நோயாளிகள் பொதுவாக மூச்சுப் பிடிக்கிறது என்றே சொல்வார்கள். அது எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். பளு தூக்குதல்மூச்சைப் பிடித்துக்கொண்டு அதிப்படியான பளுவை முறையற்று தூக்கும் போது அந்த இடத்தில் தசைநார்களில் இறுக்கம் ஏற்பட்டு, அதனால் மூச்சுவிட்டால் வலி ஏற்படும். சிலருக்கு ஜிம் சென்ற புதிதில்இப்பிரச்னை ஏற்படும். ஜிம்மில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள வேண்டும். அதற்கு முறையான பயிற்சியாளர்களிடம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

#விபத்து

சிலருக்கு விபத்தின் காரணமாக மார்பு பகுதியில் அடிபடும் போது மார்பு தசைகளில் ரத்தக்கட்டு ஏற்படலாம். மார்பு எலும்புகளுக்கு நடுவில் உள்ள தசை நார்கள் பாதிக்கப்படுவதால், மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம். விளையாட்டில் ஏற்படும் காயங்களாலும் இப்படி ஏற்படலாம்.

#சளி

கிருமி தொற்று, சளித்தொல்லை, நிமோனியா போன்ற நோய்களாலும் மூச்சுப்பிடிப்பு வரலாம். அவர்களுக்கு நுரையீரலைச் சுற்றியுள்ள ப்ளூரா (Pleura) என்னும் வெளிப்புறச்சவ்வு கிருமி தொற்றுகளால் பாதிக்கப்படுவதால் இப்பிரச்னை ஏற்படும். காச நோயின் காரணமாகவும் மூச்சுப்பிடிப்பு வரலாம். இவர்களுக்கு இருமினாலும் வலிக்கும்.

#அலர்ஜி

ஆஸ்துமா, அலர்ஜி போன்ற காரணங்களாலும் மூச்சுப்பிடிப்பு ஏற்படும். விஷ வாயு, கொசு மருந்து, பட்டாசுப் புகை போன்றவற்றை சுவாசிக்கும்போது சிலருக்கு மூச்சுப்பிடிப்பு ஏற்படும்.

#அதிக_குளிர்

நேரடியாக தாக்கும் அதிகப்படியான குளிர்ச்சி மார்புக் கூடு மத்தியில் இருக்கும் தசைகளை இறுக்கும். இதனால் மூச்சுப்பிடிப்பு ஏற்படும்.

#அஜீரணக்_கோளாறுகள் (Acidity)

காரமான உணவுகள், எண்ணெய் பொருட்கள், இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பது, முறையான உணவுப்பழக்கமின்மை, காலை உணவை தவிர்ப்பது, வெறும் வயிற்றில் அதிக நேரம் இருப்பது, மன அழுத்தம், ஆல்கஹால், அளவுக்கு மீறி சாப்பிடுவது போன்ற காரணங்களால் அஜீரணக் கோளாறு ஏற்படும். இரைப்பையில் அமிலம் அதிகம் சுரப்பதால் இரைப்பையின் உட்சவ்வும், உணவுக்குழாயின் உட்சவ்வும் அரிக்கப்பட்டு அந்த இடத்தில் வீக்கம் ஏற்படும். உணவு ஜீரணிக்காமல் போவதால்நெஞ்செரிச்சல், நடு மார்பின் நேர் உட்பகுதியிலோ, அதற்கு நேர் பின்புறத்திலோ வலி இருக்கும். இரைப்பை விரிவடைந்து நுரையீலுக்கு அழுத்தம் கொடுக்கும். இதனால் இவர்களுக்கு மூச்சுப்பிடிப்பு ஏற்படும்.

#மாரடைப்பு

இதய ரத்தக் குழாய் அடைப்பின் காரணமாக ஏற்படும் மாரடைப்பினால் மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம். இவர்களுக்கு மார்புக்குக் கீழே கல் வைத்து அழுத்துவது போன்ற வலி இருக்கும்.
சிகிச்சைகள் என்னென்ன?

மூச்சடைப்புக்கு அதன் அடிப்படை காரணத்தை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்த சிகிச்சை கொடுக்க வேண்டும். பளு தூக்குவதால் ஏற்படும் மூச்சடைப்புக்கு வலி நிவாரண மருந்துகள் தடவலாம். வலி நிவாரண மாத்திரைகள் சாப்பிடலாம். அதற்கும் மேல் வலி நீடித்தால்
மருத்துவரை அணுகுவது நல்லது.

எங்காவது இடித்துக்கொள்ளுதல் போன்ற சிறு விபத்தாக இருக்கும்பட்சத்தில் அந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது நல்லது. பெரிய விபத்துஏற்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வதுதான் சிறந்தது.

சளி மற்றும் அலர்ஜியால் ஏற்படும் மூச்சடைப்புக்கு, சளி மற்றும் அலர்ஜிக்கான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது சரியாகும். சளிக்கு ஓய்வு, வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது, சுக்கு கஷாயம் போன்ற வீட்டு வைத்தியங்கள் ஆரம்ப நிலையில் கை கொடுக்கும். 24 மணி நேரம் தாண்டியும் இது தொடருமானால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

அதிக குளிரினால் ஏற்படும் மூச்சுப்பிடிப்புக்கு குளிர் நேரடியாக தாக்காமல்பார்த்துக்கொள்ள வேண்டும் ஸ்வெட்டர், ஸ்கார்ப் போன்ற கம்பளி உடைகளால் மார்பு மற்றும் காதுப் பகுதிகளை மூட வேண்டும். சூடானபானங்கள் அருந்துவது கை கொடுக்கும்.காச நோயினால் ஏற்படும் மூச்சுப்பிடிப்புக்கு காச நோய்க்கான மருந்துகள் எடுத்துக்கொண்டால்தான் சரியாகும்.

பெரும்பாலும் 90 சதவிகித மூச்சுப்பிடிப்புகள் அஜீரணக் கோளாறுகளால்தான் ஏற்படுகின்றன. மூச்சடைப்புடன் புளித்த ஏப்பம், வாந்தி உணர்வு, குமட்டலும் ஏற்படும். உணவுப் பழக்கத்தை மாற்றினால் தவிர, இந்தப் பிரச்னை தீராது. அதிக அளவில் பிரச்னை இருக்கும் போது ஆன்டி ஆசிட் மாத்திரைகளும் எடுக்க வேண்டி இருக்கும். குறைந்த அளவில் இருக்கும் போது சீரகத் தண்ணீர் போன்ற வீட்டு ைவத்தியங்கள் உதவும். இது மாரடைப்பாக இருக்கும்
பட்சத்தில் உடனடியாக சிறப்பு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

#எப்படி_கண்டறியலாம்?

பளு தூக்குதல், சளி, அலர்ஜி, அதிக குளிர், விபத்து போன்றவற்றைநோயாளிகள் சொல்வதை வைத்து அஈறிந்து கொள்ளலாம்.
காச நோயால் ஏற்படும் மூச்சடைப்பின் போது வலி இருக்கும் இடத்தை படிப்பறிவில்லாத எளிய மக்களால் கூட எளிதாக சொல்ல முடியும். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து அது காச நோயா இல்லையா என்பதை மருத்துவர் உறுதி செய்வார். அஜீரணக் கோளாறுகள் மற்றும் மாரடைப்புக்கான மூச்சுப்பிடிப்பை கண்டறிவதில் கவனம் தேவை.

மருத்துவர்களின் கவனத்தில் இருந்து கூட இது தவறிவிடுவதுண்டு. சாதாரண அஜீரணக் கோளாறுதான் என்று நினைத்து அலட்சியமாக விடும் போது அது மாரடைப்பாக இருந்து, அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வருவதும் உண்டு. சில நேரம் மாரடைப்பு என்று நினைத்தால் அது வெறும்அஜீரணக் கோளாறாகி விடுவதும் உண்டு.

அதனால் மூச்சுப்பிடிப்பு என்று வருபவர்களிடம் அவர்கள் சொல்லும் கோளாறுகளை கவனிப்பதுடன் அவர்களின் வயது, அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய்கள் போன்றவற்றை வைத்துதான் சிகிச்சை எடுக்க வேண்டும். 40 வயதை தாண்டியவர்கள், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாதவிடாய் நின்ற பெண்கள், அதிகம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், மது பழக்கம் இருப்பவர்கள், அதிக பருமன் உள்ளவர்கள் போன்ற மாரடைப்பு வருவதற்கான சாத்தியக் கூறுகள்அதிகம் உள்ளவர்களுக்கு இசிஜி மற்றும் சில டெஸ்டுகளை எடுத்துப்பார்த்து முடிவுக்கு வர வேண்டும்.

மூச்சுப்பிடிப்பு என்று வருபவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு அது மாரடைப்பாக இருக்கலாம். ஒருவேளை அது சாதாரண மூச்சுப்பிடிப்பாக இருக்கும் பட்சத்தில் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் இது ரத்தக் குழாய் அடைப்பினால் ஏற்படும் மூச்சுப்பிடிப்பு இல்ைல என்பதை நோயாளிக்கு உறுதி செய்ய வேண்டும். மாரடைப்பென்றால் தகுந்த சிறப்பு சிகிச்சைகளை உடனடியாக மருத்துவர் மேற்கொள்ள வேண்டும்.